‘அச்சே தின்' எங்க வருது.. தினமும் மக்களை பலிதான் கொடுக்குறீங்க- பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!
சென்னை : சிலிண்டர் விலை உயர்வு மக்கள் வாழ்க்கை மீது இரக்கமற்ற தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை திரும்பப் பெறவேண்டும் என சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு.. அண்ணாமலை போராட்டம் நடத்துவாரா.. வைகோ கேள்வி!
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய விலை உயர்வின்படி, அதன்படி டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1053 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ1,058.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது ரூ1068.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 8 முறை வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சிபிஐ கண்டனம்
சிலிண்டர் விலை உயர்வுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை பாஜக மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் எட்டாவது முறையாக விலையை உயர்த்தி, தற்போது 14.2 கிலோ எடையுள்ள ஒரு எரிவாயு உருளை, நுகர்வோர் ரூ.1068 கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
அச்சே தின் எங்கே?
மத்திய அரசின் அதிகாரத்துக்கு வரும் நேரத்தில், ''அச்சே தின் ஆனே வாலே'' (இனி நல்ல நாட்கள் வருகின்றன) என மோடி உறுதியளித்தார். ஆனால், எட்டாண்டு காலத்தில் விலை ஏற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் நான்கு கோடி சமையல் எரிவாயு நுகர்வோர், மறு சிலிண்டர் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மறுபக்கம் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் தொகை லாபம் அடைந்து வருகின்றன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பெற்று, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறி வருகின்றன.
இரக்கமற்ற தாக்குதல்
ஆனால் மாத ஊதியப் பிரிவினர் முதல் தினக்கூலி தொழிலாளர் வரை கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவிட் 19 நோய்த் தொற்றுப் பரவல், அதன் உருமாறி அலை, அலையாக நோய்த்தொற்று பரவும் சூழலில், வேலையிழப்பு மற்றும் வருமான இழப்பும் தொடர்கின்ற நிலையில் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது, மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதலாகும்.
மக்களை பலியிடுவதா?
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்கு மக்கள் நலனை பலியிட்டு வரும் பாஜக மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உயர்த்தப்பட்ட விலையை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என முத்தரசன் தெரிவித்துள்ளார்.