முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சளி, காய்ச்சல் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர் நல்லகண்ணு உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சளி, காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணு நலமுடன் இருப்பதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து கடந்த 24ஆம்தேதி மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த நல்லகண்ணுவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது. பொதுப்பிரிவு மருத்துவர்கள், நுரையீரல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.