"இதெல்லாம்" என்ன காம்ரேட்ஸ்.. அன்னிக்கு அவ்வளவு பேசிட்டு.. கடைசில முத்தரசன் இப்படி சொல்லிட்டாரே!
ரஜினியிடம் ஆதரவு கேட்க போவதாக முத்தரசன் அறிவித்துள்ளார்
சென்னை: திமுக கூட்டணி சார்பில் நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.. இதையடுத்து, "போயும் போயும் கம்யூனிஸ்ட்களின் எண்ணம் ஏன் இப்படி போகிறது" என்ற விமர்சனங்கள் கடுமையாக எழ ஆரம்பித்துள்ளன.
தேர்தல் நெருங்குகிறது.. பிரதான கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக ஆரம்பமாகிவிட்டன.. சீட் ஒதுக்கீடுக்கான பேரங்கள் துவங்கிவிட்டன.. தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த டிமாண்டும் தொடங்கிவிட்டன.
இதில், அதிமுக, திமுக கூட்டணிகளில் இருப்பவர்கள், தொடர்ந்து தங்கள் கூட்டணியிலேயே நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.. ஒருசில பிரச்சனைகள், நெருக்கடிகள் தலைதூக்கினாலும் அவைகள் பேசி தீர்த்து கொள்ளப்படும் என்றும் நம்பப்படுகிறது.
குப்புச்சிப்பாளையம் ரோட்டில்.. அப்படியே "மிரண்டு" போய்ட்டாராமே ஸ்டாலின்.. காரணம் செந்தில் பாலாஜிதான்
அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இப்போதைக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.. சீட் எவ்வளவு கேட்க போகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. ஆனால், ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று முத்தரசன் அறிவித்துள்ளார். இதுதான் பெருத்த விவாதத்தை கிளப்பி வருகிறது.
பிரச்சாரங்கள்
இங்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்து 95 வருஷத்துக்கும் மேலாகிறது.. அப்போதும் சரி, இப்போதும் சரி, நடிகர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்வதில்லை என்ற ஒரு குறிக்கோளுடன் பயணித்து வருகிறது.. அதாவது நடிகர், நடிகைகளின் பிரபலத்தை தங்கள் தேர்தல்களில் பயன்படுத்துவதில்லை.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், குறுக்கு வழியில் வெற்றியை அடைய விரும்பாததன் நோக்கம்தான் இது.. அதிமுகவோ, திமுகவோ எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் சரி, அல்லது தனித்து போட்டியிட்டாலும் இதுவரை நடிகர்கள் என்ற மாயை கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரத்தில் நடைமுறைப்படுத்தியதே இல்லை.
ரஜினி
ஆனால், அவ்வளவும் இப்போது சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. ரஜினியிடம் ஆதரவு கேட்கும் நிலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.. இதே முத்தரசன்தான், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று அன்று சொன்னார்.. இப்போது கட்சி ஆரம்பிக்கவில்லை என்றதும், அவரது ஆதரவை மட்டும் கோருவது சரியா? அது சந்தர்ப்பவாதம் ஆகாதா? என்ற கேள்வியும் நமக்குள் வருகிறது.
ஜெயலலிதா
முன்பெல்லாம் ஜெயலலிதா இருக்கும்போது, மூத்த தலைவர் தா.பாண்டியன் அடிக்கடி சென்று சந்தித்து பேசி சீட் கேட்பார்.. இதற்கே அப்போது நிறைய விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்த வரலாறும் உண்டு.. பொதுவாக, தாங்கள் செய்த சாதனை, தங்களின் கட்சி கொள்கை இவைகளை பிரதானமாக எடுத்து வைத்து வீறு நடை போட்டுவந்த கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி.. ஆனால், சென்ற எம்பி தேர்தலில், 25 கோடி கம்யூனிஸ்ட்டுகளுக்கு தரப்பட்டதாக திமுக தலைவர் முக. ஸ்டாலினே ஒரு தகவலை பகிரங்கப்படுத்தி இருந்தார்.. அப்போதுதான் பலருக்கும் அந்த தகவல் ஷாக்காக இருந்தது.
25 கோடி ரூபாய்
இந்த கட்சிக்கார்களும் காசு வாங்கினார்களா என்ற அதிர்ச்சி மேலோங்கியது.. இப்போது அடுத்த அதிர்ச்சியாக ரஜினியிடம் ஆதரவை கேட்க போவதாக சொல்லி இருக்கிறது.. மார்க்ஸ், லெனின், பகத்சிங்கை முன்னோடியாக வைத்துக்கொண்டு அரசியல் செய்த இயக்கம், இன்று நடிகர்களின் ஆதரவை கேட்பது என்னவென்று சொல்வது? அப்படியே ஆதரவு தந்தாலும், ரஜினியே வேண்டாம் என்று அலறிய கூட்டணியில் உள்ள திமுக அதை மட்டும் ஏற்குமா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் தரம் தாழ்ந்து விட்டதா? அல்லது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவீனம் ஆகி விட்டதா? எதுவுமே தெரியவில்லை!