"வேற மாதிரி இருக்கே.. இதெல்லாம் பெருமையா.. பிரச்சாரத்தின் துவக்கம்".. இரா. முத்தரசன் காட்டம்.. ஏன்?
சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன், குடியரசு தலைவர் உரை குறித்து தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்
சென்னை: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை மக்களவைத் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத்தலைவர் உரையுடன் ஆரம்பமானது.. நாடாளுமன்ற 2 அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.
அப்போது குடியரசு தலைவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருந்தார்.. குறிப்பாக, சர்ஜிக்கல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம் முதல் முத்தலாக் நீக்கம் என அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது...
குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
உழைப்பு
இந்த அரசு நிலையானது, அச்சமற்றது, தீர்க்கமானது, மிகப்பெரிய கனவுகளை நனவாக்க உழைக்கக்கூடியது. ஏழைகளை மேம்படுத்துவதையே தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், மின்இணைப்பு வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் என ஏழைகளின் சிரமங்களை போக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குடியரசுத்தலைவர் உரையில் இடம்பெற்றிருந்தன.
சசிதரூர்
இந்நிலையில், குடியரசு தலைவரின் உரையை அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.. அந்தவகையில், மூத்த தலைவர் சசி தரூர் சொல்லும்போது, ''குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் மூலமாக பாஜக தனது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை அவரைக் கொண்டு தொடங்கி இருப்பதுபோல் தோன்றுகிறது. குடியரசுத்தலைவரின் மொத்த உரையுமே தேர்தல் பிரச்சார உரையாகத்தான் இருந்தது. அரசு செய்த அனைத்தையும் குறிப்பிட்டு குடியரசுத்தலைவர் புகழ்ந்து பேசியிருக்கிறார். அரசு செய்யத் தவறியவை குறித்து குடியரசுத் தலைவர் எதையும் குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.
முத்தரசன்
அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் இதுகுறித்து தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றியுள்ளார். பழங்குடியின சமூகத்தில் இருந்து நாட்டின் உயர்ந்த பெண் என்ற பெருமை பெற்றவர் ஆற்றும் முதல் உரை, அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தொடக்கி வைத்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுப் பரவில் நொறுங்கிப் போன சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்டும் செய்தி ஏதும் இடம் பெறவில்லை.
அதானி க்ரூப்
வேலையில்லாதோர் எட்டு சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவது குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. பன்னாட்டு குழும நிறுவனமான அதானி குழுமங்களின் பங்கு மதிப்பு ஊதிப் பெருக்கப்பட்டதும், கணக்கியல் மோசடிகளும் வெளியாகியுள்ள நிலையிலும் நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையின் தீய விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவர் உரை கவலைப்படவில்லை. பல மாநிலங்களில் கூட்டாட்சி கோட்பாடுகள் தகர்க்கப்படும் முறையில் ஆளுநர்கள் செயல்படுவது குறித்து கவனம் செலுத்தவில்லை.
தொடக்கவுரை
இது போன்ற நிகழ்கால நிலவரத்தை பிரதிபலிக்காத குடியரசுத் தலைவர் உரை, அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது போன்றவைகளை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து, அடிமைத்தனத்தின் அடையாளங்களை முற்றிலுமாக அகற்றி விட்டதாக பெருமை பேசுகிறது. நாட்டு மக்கள் வாழ்க்கை நிலைகளை கருத்தில் கொள்ளாத குடியரசுத் தலைவர் உரை, அடுத்த ஆண்டு வரும் தேர்தல் பரப்புரை தொடக்கவுரையாக அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது" என்று முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.