இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைத்தால் நல்லது தான் என்றும், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் யோசிக்க வேண்டும் எனவும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என்பது தனது விருப்பம் எனக் கூறினார். அவ்வாறு இணைவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், மோடி அரசு அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் சாதகமாக கொள்கைகளை வகுத்து செய்லப்டுவதாகவும், பாமர மக்களை பற்றி கவலைப்படாதவர் மோடி எனவும் சாடினார். பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளும் வீழ்ச்சிப்பாதையில் செல்வதாக புகார் தெரிவித்தார். இதேபோல் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றியும் முத்தரசன் விமர்சனம் செய்தார்.
நீண்ட நாட்களாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு தொடர்பாக ஊடல் பூடலாக பேசப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இந்த விவகாரத்தில் முத்தரசன் தனது நிலைப்பாட்டை பொதுவெளியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா அண்மையில் பதவியேற்றதை அடுத்து, இது தொடர்பாக மாநில நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளில் பெரும்பாலோனோர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.