திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை:திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
யாரும் எதிர்பாராத வண்ணம் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக களமிறங்கி உள்ளன.
எந்த கட்சிக்கு எந்த கட்சி ஆதரவு, ஆதரவில்லை என்ற அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிமுக, திமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே தான் இம்முறை போட்டி என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
இந் நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயற்குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வெளியிடப்பட்டது
அதில் அவர் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் இருபது சட்டப்பேரவை தொகுதிகள், பேரவை உறுப்பினர்கள் இன்றி உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் ஜனவரி 28-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்
கலைஞர் வெற்றிபெற்ற திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது.
தேவை அரசியல் மாற்றம்
அரசியல் அமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படவும், மதச்சார்பின்மை காக்கப்படவும் மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதே போன்று மாநில உரிமைகள், அதன் நலன்கள் மற்றும் மக்கள் நலன் என்று எதுக் குறித்தும் கவலைப்படாமல் மத்திய ஆட்சியின் தயவு ஒன்றே போதுமானது என்ற நிலையில் உள்ள அதிமுக ஆட்சியும் அகற்றப்பட வேண்டும்.
செயற்குழுவில் ஆதரவு முடிவு
ஆங்கில புத்தாண்டான 2019 மோடி, எடப்பாடி தலைமையிலான மத்திய, மாநில ஆட்சிகளுக்கு விடை அளித்திடும் ஆண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவை ஆதரிப்பது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.
திமுகவுக்கு வெற்றி
தேசம் காக்க, தமிழகம் மீட்கப்பட திருவாரூர் தொகுதி வாக்காளர்கள், திமுகவிற்கு பேராதரவு அளித்து, வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய், மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.