நீதித்துறையில் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது... எச்சரிக்கை விடுக்கும் முத்தரசன்
சென்னை: தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மத்திய அரசும், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.கட்டுப்பாடில் இயங்குவதாகவும், அதன்படி அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசுத்துறைகளில் மதவாத சக்திகளை பணியமர்த்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ்.ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்துராஷ்டிராவை கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு நீதித்துறையில் தலையிடுவதை தீவிரப்படுத்தியுள்ளதாக புகார் கூறியிருக்கிறார்.
தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளாக பணியாற்ற வழிவகுக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறியிருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத, அரைகுறை தமிழ் தெரிந்த கீழமை நீதிமன்ற நீதிபதிகளால் எண்ணிப்பார்க்க முடியாத எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
உறுதி அளித்த தலைவர்கள்.. ஜம்முவில் 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு
நீதித்துறையின் கட்டமைப்பையும், பரிபாலின முறையையும் சீர்குலைக்கும் மத்திய பாஜக அரசின் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில் சட்டம் பயின்ற , சட்டம் பயில்கின்ற தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்க வழிவகை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழர்களின் சமூக பழக்க வழக்கம், மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறிய முத்தரசன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.