Exclusive: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்... இந்திய கம்யூ. முத்தரசன் சிறப்புப் பேட்டி
சென்னை: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் கூறுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். மேலும், திமுகவுடனான கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டீர்களா?
பதில்: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
கேள்வி: உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன? திமுகவிடம் எதைப் பற்றி பேச உள்ளீர்கள்?
பதில்: (சிரிக்கிறார்) அது வெளிப்படையாக சொல்லக்கூடிய விஷயம் அல்ல. அப்படியிருக்கும் போது அதைப் பற்றி நான் எப்படி உங்களிடம் தெரிவிக்க முடியும். பொதுவெளியில் பேச முடியாது என்பதால் மேலும் இதைப் பற்றி கேட்காதீர்கள்.
கேள்வி: திமுகவை மையமாக வைத்து பல சர்ச்சைகள் எழுந்தன... கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?
பதில்: தவறு, நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. இது தொடர்பாக நான் வெளியிட்ட அறிக்கையை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என நினைக்கிறேன். திமுக மீதான புகார்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: இந்த விவகாரத்தில் உங்கள் அறிக்கை வீரியமிக்கதாக இருந்திருந்தால், கூட்டணிக் கட்சிகள் மீது கே.என்.நேரு எதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும்... அப்ப பெயருக்கு அறிக்கை விட்டது போல் தானே தெரிகிறது..
பதில்: (கேள்வியை முடிக்கும் முன்பே) நான் பதில் சொல்லிவிட்டேன் எனக் கூறுகிறேன், அப்படியிருந்தும் திரும்ப திரும்ப அதைப்பற்றி கேட்கிறீர்கள்.
கேள்வி: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையுமா?
பதில்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என்பது எங்களின் (இந்திய கம்யூ.) நிலைப்பாடு. மார்க்சிஸ்ட் நிலைப்பாடு பற்றி எனக்குத் தெரியாது. மற்றபடி இணைப்புக்கான நடவடிக்கைகள் எல்லாம் இப்போது தொடங்கவில்லை.
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்படியே கம்முன்னு இருக்கிற மாதிரி தெரியுதே... ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் எங்கே போயின?
பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். இப்பக்கூட மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் 10-ம் தொடங்கி 16-ம் தேதி வரை போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சி தொண்டர்களும் பங்கேற்றார்கள். ஆகையால், மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
காங்கிரஸுக்கு பெப்பே.. சிவசேனாவுக்கு டிமிக்கி.. அலேக்காக தேசியவாத காங்.கை உடைத்த பாஜக.. செம டிவிஸ்ட்