EXCLUSIVE: மருத்துவ கட்டமைப்பை சரி பண்ணுங்க.. தொழிலாளர் சட்ட திருத்தம் அவசியமா.. சிபிஎம் பாய்ச்சல்
பொருளாதார நெருக்கடியில் மேலும் சிக்குவோம் என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் கூறுகிறார்
சென்னை: பார்த்துட்டே இருங்க, நோய் பாதிச்சவங்களை ஆஸ்பத்திரிக்கே வராதீங்கன்னு சொல்ல போறாங்க... வீட்லயே இருந்துக்குங்க.. இல்லேன்னா ரோட்டில போய் எங்காவது படுங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க... அப்படி இருக்குது மருத்துவ கட்டமைப்பு.. அதையெல்லாம் சரி பண்றதை விட்டுட்டு திரும்ப திரும்ப தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கிறது, மேலும் மேலும் சட்டங்களை திருத்தறது.. இதனால எல்லாம் எந்த பொருளாதாரமும் முன்னேற போறது இல்லை. இன்னும் கூடுதலாக நெருக்கடிதான் வர போகுது" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார்.
தொழிலாளர் நல சட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் மாற்றியமைக்கப்படுகிறது.. இந்த திடீர் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன என்றே நாம் இதை கருத்தில் கொண்டாலும், மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியுமா? நாடு சிக்கியுள்ள இந்த தொற்று காலத்தில் இது அவசியமான ஒன்றுதானா? இந்த நடவடிக்கை காரணமாக பின்விளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா? பொருளாதார வல்லுநர்கள் பேசி வந்த உண்மையான பொருளாதார சீர்திருத்தங்கள் இவைதானா? கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தாதா? என்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் நம் முன்பு எழுகின்றன.
"ஒன் இந்தியா தமிழ்" சார்பாக சிபிஎம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணனை சந்தித்து இதுகுறித்து கருத்து கேட்டோம். அவர் சொன்னதாவது:
"உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிட்டு இருக்கு.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசும், மாநில மாநில அரசுகளும் இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான வருஷமா போராடிட்டு இருக்கிற தொழிலாளர்களின் உரிமைகளில் கை வைப்பது கொஞ்சம் கூட நியாயமே கிடையாதுங்க.. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ, கார்ப்பரேட் பொருளாதார அரசு.. இவங்களுக்கு தொழிலாளர்களை பற்றியோ, மக்களை பற்றியோ எந்த கவலையும் இல்லைங்கிறதை எடுத்து காட்டுவதுதான் இதுபோன்ற சட்டதிருத்தங்கள், இந்த உரிமைகளை பறிப்பது எல்லாம்.
அதாவது ஒரு மாநில அரசாங்கம், அங்கிருக்கிற தொழிலாளர்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது இல்லை அப்படின்னா, அவங்களை மனுஷனா கூட நடத்த முடியாது, ஒரு அடிமையாதான் நடத்துவோம் என்பது மாதிரி சட்டதிருத்தம் கொண்டு வந்தாங்கன்னா அந்த மாநில அரசாங்கத்தை பத்தி என்ன சொல்றது? கடைந்தெடுத்த கார்ப்பரேட் முதலாளிகளை பாதுகாக்கிற ஒரு அரசு நிர்வாகமா இது மாறி போயிருக்கு அப்படிங்கிறதுதான் இதன் அடிப்படை.
உதவிகேட்டு இதுவரை 15 லட்சம் அழைப்புகள்... திமுகவினர் இருக்கும் திசைநோக்கி வணங்குகிறேன்- ஸ்டாலின்
இவங்களுக்கு கொரோனாவை எதிர்த்து போராடறோம்னு சொல்றாங்க.. ஆனா இதை எதிர்த்து அவங்க உருப்படியா எதுவும் செய்ற மாதிரி இல்லை.. இன்னும் சொல்லப்போனால் மருத்துவமனையிலேயே அவலம்தான் இருக்கு.. நாளைக்கு பார்த்துட்டே இருங்க, நோய் பாதிச்சிட்டு இருக்கிறவங்களை மருத்துவமனைக்கே வராதீங்கன்னு சொல்ல போறாங்க... வீட்லயே இருந்துக்குங்க.. இல்லேன்னா ரோட்டில போய் எங்காவது படுங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க.
ஏன்னா மருத்துவ வசதியே இல்லை.. படுக்கிற வசதிகூட இல்லை.. குறைந்த பட்சம் மருத்துவ கட்டமைப்புகூட கிடையாது.. தனியார் மருத்துவமனைகளை எடுக்க ஏற்பாடு செய்யல.. ஏற்கனவே எடுத்த இடங்களில் அடிப்படை வசதியும் எதுவும் செய்யல.. அங்கிருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகூட இல்லை.. ஒரே நாளில் 4 ஆயிரம் கேஸ்ங்க வருது.. போற போக்கில் லட்சக்கணக்காகும் போல இருக்கு.. கொரோனாவை எதிர்த்து எதையுமே செய்யல.. கொரோன என்ற போர்வையில் மக்களின் உரிமைகளை பறிக்கிறார்கள்.. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கிறாங்க.
இன்னைக்கு பொருளாதார நெருக்கடி இருக்கு.. பொது முடக்கம் என்பதால தொழில்கள் எதுவும் இயங்கல.. மாநில, மத்திய அரசுக்கு வருமானம் குறையும்ன்னு சொல்றாங்க. இப்படிப்பட்ட நேரத்துல வருமானத்தை அதிகப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கணுமே தவிர, ஏற்கனவே நொந்து போனவங்க தலையிலேயே கை வைக்க கூடாது.. அகவல் படியை ரத்து பண்றோம், சம்பளத்தை பிடிச்சிப்போம் இப்படியெல்லாம் செய்ய கூடாது.. அவங்க தலையிலேயே கையைவைக்கிறதுக்கு பதிலா, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 1%, அல்லது 2% வரி போடுங்க.. அவங்களுக்கு ஒன்னும் இதனால பெரிய நெருக்கடி வந்துட போறது இல்லை.
ராணுவத்துக்கு இவ்ளோ செலவு பண்ணீங்களே, அதை கொஞ்சம் குறைத்து கொரோனா ஒழிக்க பயன்படுத்தி இருக்க கூடாதா? இப்படி தங்களுடைய செலவுகளை கட்டமைச்சு, மக்களுக்கான நிவாரணம், உதவிகளில் கவனம் செலுத்தணும்.. முதல்ல பள்ளத்தை மேடாக்க பாருங்க.. மேலும் மேலும் பள்ளத்தை நோண்டிட்டே போனால் எப்படி சமனாகும்? மேட்டுக்குடி மக்களின் தலையில் வரியை போடுங்க.. அதை வைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணம் குடுங்க.. அதுதான் ஒரு நல்ல ஆரோக்கியமான பொருளாதார மேம்பாடாக இருக்க முடியும்.
மேலும் எத்தனையோ பொருளாதார நிபுணர்கள் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சொல்லி இருக்காங்க.. அதையும் பரிசீலிக்கணும்.. இதையெல்லாம் விட்டுட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கிறது, மேலும் மேலும் சட்டங்களை திருத்தறது.. இதனால எல்லாம் பெரிய அளவு பொருளாதாரம் முன்னேற போறது இல்லை. இன்னும் கூடுதலாக நெருக்கடிதான் வர போகுது" என்றார்.
அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் இரா.முத்தரசன் இதை பற்றி நம்மிடம் சொல்லும்போது, "இதையெல்லாம் எதுக்கு மாத்தணும்? இப்போ இருக்கிறதை அப்படியே தொடர்ந்து கொண்டுபோனாலே போதும்.. அப்படியே சட்டத்தை மாத்தினாலும் இப்போ இருக்கிறதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியா ஜாதி வாரியா பிரிச்சு செயல்பட்டால் அது மேலும் மேலும் கஷ்டத்தை தான் தரும்... இது தொழிலாளர்களின் உரிமையை பறிக்ககூடியதாக இருக்கிறது.. அதனால் நடைமுறையில் உள்ளதை மாற்ற கூடாது என்பதுதான் என் கருத்து"என்றார் முத்தரசன்.