அதெப்படி காந்தியை 'தீவிரவாதி'ன்னு சொல்லலாம்? திருமாவளவன் மீது சி.பி.எம் அருணன் பாய்ச்சல்
சென்னை: மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அருணண் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பேசிய திருமாவளவன், காந்தி ஒரு இந்து தீவிரவாதி..எக்ஸ்ட்ரீமிஸ்; அவரை படுகொலை செய்த கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அருணன் எழுதியுள்ளதாவது:
"காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி": திருமா. கோட்சேயை பற்றிய கணிப்பு மிகச் சரி. ஆனால் காந்தி பற்றிய சொல்லாடல் பொருத்தமானது அல்ல.
இப்போது "தீவிரவாதி" எனும் சொல் மோசமான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத நம்பிக்கையாளர்தான் காந்தி. ஆனால் இந்த நாடு இந்து நாடாக அறிவிக்கப்படக் கூடாது என்றவர் அவர்.
வருணாசிரமத்தை முதலில் ஆதரித்தவர் கடைசி காலத்தில் அதையும் எதிர்க்கத் துணிந்தார். அனைத்திற்கும் மேலே இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக நின்றார்.
அவர் எப்படி "இந்து தீவிரவாதி"யாவார்? தயவுசெய்து காந்தியை இப்படி வருணிக்க வேண்டாம் என்று எனது மதிப்பிற்குரிய திருமா அவர்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அருணன் பதிவு செய்துள்ளார்.