மே. வங்கத்தில் இடதுசாரி வாக்குகள்தான் பாஜகவுக்கு போனது...ஒப்புக் கொண்ட சிபிஎம் அருணன்
சென்னை: மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் வாக்குகள்தான் பெருமளவு பாஜகவுக்கு போயிருக்கிறது.. இது குறித்து ஆராய வேண்டும் என தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் வலியுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இடதுசாரிகள் 4 இடங்களில் வென்றுள்ளனர். ஆனால் அவர்களது கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக பெருவெற்றியைப் பெற்றுள்ளது.
இடதுசாரி கட்சிகளின் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு போயிருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள். இதனைத் தொடர்ந்து மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை என்கிற கலகக் குரல் இடதுசாரி அறிவுஜீவிகளிடத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன், வங்க மாதா அழுகிறாள் என்கிற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
மேற்குவங்கத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கவலை தருபவை. ஒரு காலத்தில் வங்கம்தான் சமூகசீர்திருத்தத்திற்கும் இடதுசாரி சிந்தனைக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டியது.
ராஜாராம் மோகன்ராய் முதல் ஜோதிபாசு வரை எத்தனையோ மகத்தான மனிதர்களைத் தந்த மண் அது! அங்கே பாஜக 18 எம்பி தொகுதிகளை மட்டுமல்ல 40% வாக்குகளை கைப்பற்றியிருக்கிறது! நம்பமறுக்கிறது மனம்.
ஆனால் வங்க மாதா அழும் குரல் தெளிவாகக் கேட்கிறது! 2014ல் கட்சிகள் பெற்ற வாக்குகள்: திரிணாமுல்-40%, இடது-30%, பாஜக-17%, காங்.-10%. 2019ல் கட்சிகள் பெற்ற வாக்குகள்: திரிணாமுல்-43%, இடது-7%, பாஜக-40%, காங்.-6%.
ஐந்தே ஆண்டுகளில் பாஜகவின் வாக்கு 23% அதிகரித்திருக்கிறது. அந்த வாக்குகள் இதுவரை இடதுசாரிகளுக்கும் காங்கிரசிற்கும் வாக்களித்தவர்களிடமிருந்து வந்திருக்கிறது; ஒரு சிறுபகுதிதான் திரிணாமுல்லுக்கு போயிருக்கிறது.
எப்படி இந்த வாக்குகள் ஒரு மதவெறிக் கட்சிக்கு போயின? ஏன் போயின? அதற்கான சமூக, பொருளாதார, வரலாற்று காரணங்கள் எவை?
அவற்றை ஆராய்ந்து உரிய வைத்தியம் பார்க்கவேண்டியது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளின் கடமை.
இவ்வாறு அருணன் பதிவிட்டுள்ளார்.