தமிழகத்துக்கு பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கொடுத்தீர்களா? பாலபாரதி பொளேர்
சென்னை: கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்துக்கு பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒரு ரூபாயாவது கொடுக்கப்பட்டதா? என மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் பாலபாரதி பேசியதாவது:
பீகாருக்கு 2 மருத்துவமனைகள்
கொரோனா நோய் தொற்று காலத்தில் பிரதமர் கேர் நிதிக்கு பல்வேறு வகைகளில் நிதி வந்துள்ளது. கொரோனா பாதிப்பில் 14-வது இடத்தில் பீகார் மாநிலத்துக்கு இந்த நிதியில் இருந்து 2 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இன்னொரு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது.
ஒரு ரூபாய்கூட இல்லையே
பிரதமர் கேர் நிதியை பீகாரும் பயன்படுத்த வேண்டும் என்பதில் தவறு இல்லை. அவர்களும் இந்திய மக்கள்தான். அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருக்கிறது தமிழகம். இந்த மாநிலத்தில் 5000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அப்படிப்பட்ட இந்த மாநிலத்துக்கு பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒரு ரூபாயாவது கொடுத்திருப்பீர்களா?
தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு
பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதால் பிரதமர் கேர் நிதியை அந்த மாநிலத்தித்துக்கு ஒதுக்கியுள்ளனர். தமிழகத்துக்கு ஒரு ரூபாயாவது கொடுத்துவிட்டு தமிழகத்தில் வளர்ச்சி இல்லை; எதிர்க்கட்சிகள் தடுக்கிறார்கள் என்று சொன்னால் பரவாயில்லை. ஏற்கனவே ஜிஎஸ்டி காலாண்டு நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்கமாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
பேரிடர் நிதி, ஜிஎஸ்டி பணம்
கொரோனா தொற்றை பேரிடர் காலத்தில் இணைத்துவிட்டீர்கள். சரி... அந்த பேரிடர் கால நிதியில் இருந்து ஒரு ரூபாயையாவது இந்த தமிழக மாநில மக்களுக்கு கொடுத்திருப்பீர்களா? மத்திய அரசு ஒரு ஆயிரம் ரூபாயாவது கொடுத்ததா?. இவ்வாறு பாலபாரதி கேள்வி எழுப்பினார்.