1951-ல் இருந்து இந்தியப் பாதையை கண்டறிய முடியாத இடதுசாரிகள்: மார்க்சிஸ்ட் அருணன் கலகக் குரல்
சென்னை: இந்தியாவில் இடதுசாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் 'மண்ணுக்கேற்ற மார்க்சியம்' தேவை என்கிற குரலை முன்வைத்துள்ளார் சி.பி.எம். கட்சியின் அருணன்.
திரிபுரா. மேற்கு வங்கம், கேரளா என இடதுசாரிகளின் கோட்டை தகர்க்கப்பட்டுவிட்டது. திராவிடர் பேரியக்கத்தின் தயவால் தமிழகத்தில் இருந்து 4 இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றனர்.
இடதுசாரிகளின் இந்த படுபாதாள வீழ்ச்சி அக்கட்சியின் அறிவுஜீவிகளால் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வேண்டும் மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் இடத்தை பாஜக பிடித்திருப்பதன் காரணத்தை அறிய வெறும் தேர்தல் பரிசீலனை மட்டும் போதாது ஒட்டுமொத்த சமூக ஆய்வு தேவை. "லால் சலாம்" சொன்ன வங்காளி எப்படி"ஜெய் ஸ்ரீராம்" சொல்கிறார் எனக் கேட்டார் ஓர் ஊடகக்கார்.
இந்தக் கேள்விக்கான விடை வங்கத்தின் வர்க்க கட்டமைப்பில் மட்டுமல்லாது சாதி கட்டமைப்பிலும் உள்ளது. இரண்டையும் ஒருசேர நோக்குகிற ஆய்வு தேவை.
இது வங்கத்திற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் பொருந்தும். இது கேரளத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். இந்த யதார்த்தம்தான் இந்த நாட்டை பிறநாடுகளிலிருந்து வேறு படுத்தி காட்டுகிறது.
எத்தன வசை அங்கே.. மொத்தமாக சேலத்தில் தேமுதிகவை வச்சு செய்த 3 மாஜிக்கள்
அந்த அர்த்தத்தில்தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவைப்படுகிறது. இந்தியாவுக்கு தேவை ரஷ்ய பாதையும் அல்ல, சீனப் பாதையும் அல்ல, இந்தியப் பாதை என்று 1951 லேயே முடிவு கட்டினாலும் அந்தப் பாதையை இன்னும் நாம் கண்டறியவில்லை என்பதையே இந்தத் தோல்வி உணர்த்துகிறது.
தோழா! முழுமையான இந்திய தரிசனம் அவசியம். அதற்கான தொடக்கத்தை தரக் கூடியது அருணன் எழுதிய "காலந்தோறும் பிராமணியம்".
இவ்வாறு அருணன் பதிவிட்டுள்ளார்.