சிபிஎம் கேட்டது 11 தொகுதிகள்... அதிகபட்சம் 5 தான்.. திமுக கறார் காட்டியதால் படு அப்செட்!
சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 தொகுதிகள் கேட்க ஆனால் 5 இடங்கள்தான் தர முடியும் என கறார் காட்டப்பட்டதால் அந்த கட்சி தலைவர்கள் படு அப்செட்டில் இருக்கின்றனராம்.
சட்டசபை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் 3; மமக 2 இடங்களைப் பெற்றுள்ளன. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் திமுகவுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
மதிமுகவைப் பொறுத்தவரை 8 தொகுதிகள் கேட்கிறது. திமுக தரப்பு 5 இடங்கள்தான் என கூறிவிட்டது. ஏற்கனவே ராஜ்யசபா சீட்டை மதிமுக பெற்றிருப்பதால் வேறுவழியே இல்லாமல் இந்த குறைவான இடங்களை மதிமுக ஏற்கக் கூடும்.
இந்த நிலையில் இன்று காலை சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் ஒருவித அப்செட் மனநிலையில்தான் சிபிஎம் தலைவர்கள் அறிவாலயத்தை விட்டு வெளியேறினர்.
இது தொடர்பாக விசாரித்த போது திமுகவிடம் 11 தொகுதிகளை சிபிஎம் கேட்டிருக்கிறது. ஆனால் திமுகவோ 5 தொகுதிகளை தருகிறோம் என்றதாம். இப்படி குறைவான தொகுதிகளை கொடுத்தால் எப்படி கட்சியினரை சமாளிப்பது என்கிற அப்செட்தான் இதற்கு காரணமாம்.