ராமநாதபுரம் கொலை- மத மோதலை தூண்டும் எச்.ராஜா உட்பட பாஜகவினர் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்
சென்னை: ராமநாதபுரத்தில் இருதரப்புக்கு இடையேயான மோதலில் ஏற்பட்ட கொலையை முன்வைத்து மதவன்முறையை தூண்டும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் வசந்தம் நகரில் ஆகஸ்ட் 31-ந் தேதி அருண் பிரகாஷ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பான படங்களை பகிர்ந்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, முஸ்லிம் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் மற்றும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் இதேபோல் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கையில் இது மதமோதல் இல்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் இடமாற்றம்- புதிய எஸ்பியாக கார்த்திக் நியமனம்
பெரும் சிக்கலில் எச்.ராஜா.. முஸ்லீம்களை மத வெறியர்களாக சித்தரிப்பதா.. கடும் நடவடிக்கை எடுக்க புகார்
ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம்- முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா? ஜவாஹிருல்லா கண்டனம்
ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கு.. 4 பேர் லால்குடி நீதிமன்றத்தில் சரண்
மத மோதல் இல்லை- போலீஸ் விளக்கம்
ராமநாதபுரம் போலீசார் அறிக்கையில், அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். என விளக்கம் அளித்திருந்தனர்.
பதிவை நீக்காத தலைவர்கள்- கண்டனம்
ஆனாலும் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் தங்களது பதிவுகளை நீக்கவில்லை. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் மதமோதல்களை தூண்டும் வகையிலான பதிவுகளை போட்டிருக்கும் எச். ராஜா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் போலீசில் புகார் மனு கொடுத்திருந்தன.
முதல்வருக்கு சிபிஎம் கடிதம்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிபிஎம் மாநில செயலாலர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசியல் லாபத்திற்காக மத மோதலை திட்டமிட்டு தூண்டுகிற பாஜக நிர்வாகிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்த சதி
மேலும் பாஜக நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்யப்படும் பிரச்சாரங்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நியாயமற்றது. ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அவர்களது நோக்கத்துக்கு துணை செய்வதாக அமைந்துள்ளது. மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தேடித் தேடி கட்சியில் சேர்ப்பதும் குற்றச் செயல் கூட்டாளிகளால் படுகொலை செய்யப்படும்போது மதமோதலுக்கு பயன்படுத்தும் முறையில் வெறுப்பைக் கக்குவதும், வன்முறையைத் தூண்டுவதும் இவர்களின் இயல்பாகவே இருக்கிறது என்றும் பாலகிருஷ்ணன் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடும் நடவடிக்கை தேவை
அத்துடன், தமிழகத்தை மதமோதல்களால் ரத்தக் களறி ஆக்கி அதில் அரசியல் லாபம் தேடுவதே இவர்களின் திட்டமாகும். எனவே முதல்வர் நேரடியாக இந்த பிரச்சனைகளில் தலையீடு செய்து அரசியல் லாபத்துக்கு மத மோதலை திட்டமிட்டு தூண்டுகிற பாஜக நிர்வாகிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றும் அக்கடிதத்தில் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.