மத வெறி.. மத்திய அரசு 8 அடி பாய்ந்தால்.. யோகி 16 அடி பாய்கிறாரே.. கம்யூனிஸ்ட் கட்சி கடும் தாக்கு!
யோகி அரசு மீது கம்யூனிஸ்ட்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்
சென்னை: "மதவெறி நோக்குடன் செயல்படும் மத்திய அரசு தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் வகையில் செயல்படும் உத்தரபிரதேச மாநில அரசும் தங்களுக்கு பிடிக்காதவர்களை குறிப்பாக சிறுபான்மை மக்களின் தலைவர்களையும், தொண்டர்களையும் குறிவைத்து வேட்டையாடுவது அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்டது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்த 2017-ல், கோரக்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாடு முழுதும் அதிர்ச்சியை தந்தது.. அப்போது, தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றியவர்தான் டாக்டர் கஃபீல் கான்.. இதனால், "ஹீரோ" வாக மக்களால் போற்றப்பட்டவர் டாக்டர் கான்.
ஆனால், யோகி அரசு, தன்னுடைய தவறை மூடி மறைப்பதற்காக, கபீல்கான் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி குழந்தைகளின் இறப்புக்கு அவரை பொறுப்பாக்கி சிறையிலும் அடைத்தது... மாநில அரசால் அவர் சஸ்பெண்ட்டும் ஆனார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 10ம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் கஃபீல் கான் பங்கேற்று பேசினார்.. அப்போது இரு சமூகத்துக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்று கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஜனவரி மாசம் கைதும் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கஃபீல் கானின் உறவினர் நுஷாத் பர்வீன் என்பவர் அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்... இதை விசாரித்த நீதிபதிகள், கஃபீல் கான் ஒற்றுமையை வளர்க்கும் வகையில்தான் பேசினார் என்று சொல்லி ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
இருப்பினும், அலிகார் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து மதுரா சிறைக்கு விடுவிக்க உத்தரவு இல்லாததால், நேற்று சாயங்காலம் வரை விடுதலை நிறுத்தப்பட்டது. விடுதலைக்கான உத்தரவு நள்ளிரவில் மதுரா ஜெயிலுக்கு வந்ததை அடுத்து கபீல் விடுவிக்கப்பட்டார்... விசாரணையின் போது காலையில் விடுவிக்க ஹைகோர்ட் சொல்லவும் விடிகாலையில்தான் வெளியே வந்தார்.
2021 சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி: அரசியல்வாதிகளை ஜனவரி வரை காக்க வைத்த நவகிரகங்கள்
அலகாபாத் கோர்ட்டின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.. இதுகுறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதவெறி நோக்குடன் செயல்படும் மத்திய அரசு, தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் வகையில் செயல்படும் உத்தரபிரதேச மாநில அரசும் தங்களுக்கு பிடிக்காதவர்களை குறிப்பாக சிறுபான்மை மக்களின் தலைவர்களையும், தொண்டர்களையும் குறிவைத்து வேட்டையாடுவது அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்டது.
அலகாபாத் நீதிமன்றம் உபி அரசு அரசின் தலையில் நன்றாக குட்டி உள்ளது.. பீமா கொரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கருத்து தெரிவித்தால், அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்வது, அர்பன் நக்சலைட் என்ற முத்திரை குத்துவது போன்ற பாஜக அரசின் மோசமான நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய - மாநில பிஜேபி அரசுகள் இத்தகைய மதவெறி காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை கைவிட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக - மத நல்லிணக்கத்தை காக்க கூடிய அரசாக செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டு கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.