"அந்த" உண்மையை மறைக்க முடியாது.. எடப்பாடியார் முதல்வரானது எப்படி.. சி.ஆர். சரஸ்வதி பகீர் பேட்டி
சசிகலா குறித்து சிஆர் சரஸ்வதி பேட்டி தந்துள்ளார்
சென்னை: "சசிகலா இப்போது அதிமுகவில் இல்லை, ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கே டெல்லியில் பேட்டி தந்து கொண்டிருந்தால், இன்னொரு பக்கம், "அதிமுகவே சசிகலா வசம் ஆகும்.. இது இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும்" என்று சிஆர் சரஸ்வதி ஆருடம் சொல்கிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, சிலர் மட்டும் அவரது நிலை பற்றி பேட்டி அளித்தார்கள். அதில் மிக முக்கியமானவர் சி.ஆர். சரஸ்வதி. "அம்மா நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார்..வேக வைத்த ஆப்பிளை சாப்பிட்டார்" என எல்லா மீடியாக்களிலும் உட்கார்ந்து பேட்டியே அளித்தவர்.
அந்த 2 இட்லிக்கு நமக்கு இன்னும் விடையே கிடைக்கவில்லை என்றாலும், டிடிவி தினகரன் அணியில் ஐக்கியமாகிவிட்ட சிஆர் சரஸ்வதி, அமமுகவில் செய்தி தொடர்பாளராக பொறுப்பில் உள்ளார். அடிக்கடி இவர் அளிக்கும் பேட்டிகள் ஆளும் தரப்பை டென்ஷன் ஆக்கிவிடும் அளவுக்கு இருக்கும்.
பதவி
ஒருமுறை வார இதழ் ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டியில், "எடப்பாடி எப்படி அன்னைக்கு முட்டிப்போட்டு எழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கினார் என்பதை இந்த உலகமே பார்த்தது.. இதுல நாங்க என்ன தனியா சொல்றது? தேர்தல் என்று வந்துவிட்டால், சட்டத்தின்முன் அனைவரும் சமம்தான்.. ஆனா இங்க அப்படி இல்லையே.. அதிமுகவில் எனக்கு கிடைச்ச 16 வருட அனுபவத்தில் சொல்றேன், இவங்க எல்லாம் யாரால் பதவிக்கு வந்தாங்கன்னு எனக்கு தெரியும்" என்று ஓபன் டாக் தந்தவர்.
சசிகலா
அதேபோல, "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து வழக்கு போடுவோம். அவர் வந்தபின் முக்கியமான மாற்றங்கள் நடக்கும்... அதை சசிகலா கவனித்துக் கொள்வார்' என்று அசராமல் பேட்டி தந்தவர். இப்போது மறுபடியும் சசிகலா வருகை குறித்து சிஆர் சரஸ்வதி பேசியுள்ளார்.. அதேபோல ஆளும் தரப்பையும் நேரடி அட்டாக் செய்து கேள்விகளை சரமாரியாக எழுப்பி உள்ளார். அவர் சொன்னதாவது:
அதிமுக
"ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக என்றால் சசிகலாதான் என்று சின்ன பிள்ளைங்களுக்கு கூட தெரியும்.. அதிமுக என்ற பேரியக்கத்துக்கு சசிகலாவின் பங்களிப்பு எப்படிப்பட்டது என்பதை தொண்டர்கள் நன்றாக அறிவார்கள்... எந்த பதவியையும் எதிர்பாராமல் ஜெயலலிதாவுடன் இருந்து கஷ்டம், நஷ்டம், வெற்றி, தோல்வி என்று எல்லாவற்றிலும் பங்கெடுத்து தன்னையே தியாகம் செய்தவர் சசிகலா.
எடப்பாடி பழனிசாமி
இன்று பதவியில் இருக்கும் சிலர் நன்றி மறந்து பேசலாம்.. அவர்களில் 90 சதவீதம் பேர் சசிகலாவால் பதவி பெற்றவர்கள்தான்.. ஓபிஎஸ் முதல்வர் பதவி வகித்ததும் சசிகலா, தினகரனின் சிபாரிசால்தான்... இன்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதும் அவரால்தான்... எம்எல்ஏக்களால் பதவிக்கு வந்ததாக சொல்கிறாரே, அந்த எம்எல்ஏக்களை சம்மதித்து ஓட்டு போட வைத்தது யார்? தான் ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தபோதும் கட்சியை விட்டு விடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள வைத்தது சசிகலாதான்... அந்த உண்மைகளை மறந்தாலும் யாராலும் மறைத்து விட முடியாது.
பரபரப்பு
இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா விடுதலையாகி வருவார்... அவர் வந்ததும் அதிமுக அவர் வசமாகும்... தொண்டர்கள் அனைவரும் அவர் பக்கம் வருவார்கள்... ஒரு இயக்கத்தின் தலைமை யார் என்பதைதான் பொதுமக்கள் பார்ப்பார்கள்... அந்த தலைமைக்கு பக்க பலமாக இருப்பது தொண்டர்கள்... அதிமுகவை நேசிக்கும் ஒவ்வொரு தொண்டனும் இந்த இயக்கத்துக்கு சிறு சேதாரம் கூட வராமல் பாதுகாத்து வைத்த சசிகலாவையும், தினகரனையும் நேசிப்பார்கள்.
வரலாறு
அவர் வெளியே வந்ததும் அதிரடியான முடிவுகளை நிச்சயம் அறிவிப்பார். தேர்தலை சந்திப்பது, கூட்டணி போன்ற எல்லாவற்றுக்கும் அவர் வந்ததும் பதில் கிடைத்து விடும்... இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயித்தது வரலாறு... ஆனால் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் எதிர்க்கட்சி வென்றது... எம்பி தேர்தலிலும் ஒரே ஒரு தொகுதியில்தான் வென்றார்கள்... இதன் மூலம் இவர்களின் செல்வாக்கு என்ன என்பது தெரிந்து விட்டது.
இரட்டை இலை
இரட்டை இலை சின்னம் இருந்தும் கூட வெற்றி பெற முடியாததன் மூலம் இவர்கள் தலைமையை மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிந்து விட்டது.... பதவிக்காக இன்று சிலர் எதையாவது பேசலாம். ஆனால் நன்றி உணர்வு அவர்கள் மனதை நிச்சயம் உறுத்தும்... அதனால்தான் பலர் வெளிப்படையாகவே ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள்... நாட்கள் நெருங்க நெருங்க இன்னும் சூழ்நிலைகள் மாறும்... எல்லோருமே சசிகலா, தினகரன் ஆதரவாளர்களாகி விடுவார்கள்... விரைவில் அதிமுக சசிகலா வசமாகும்... அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை" என்றார்.
முதல்வர் பேட்டி
"சசிகலா இப்போது அதிமுகவில் இல்லை, ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.. அவரால் அதிமுகவுக்கு பாதிப்பு கிடையாது" என்று டெல்லியில் முதல்வர் பேட்டி தந்துள்ள நிலையில், சிஆர் சரஸ்வதியின் பேச்சு மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.