கிரேஸி மோகன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்
சென்னை: புகழ் பெற்ற திரைப்பட வசன கர்த்தா மற்றும் நாடக ஆசிரியர் கிரேசி மோகன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற திரைப்பட வசன கர்த்தா, கிரேசி மோகன் இன்று சென்னையில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.
இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வசன கர்த்தா கிரேசி மோகன் கலையுலக சேவையை பாராட்டி, கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அனைவரிடமும் இனிமையாக பழகக் கூடியவர். நாடகத்துறையிலும், திரைத்துறையிலும், தனி முத்திரை பதித்துள்ளார். கிரேசி மோகன் மறைவு தமிழக நாடகத்துறைக்கும், சினிமாத்துறைக்கும் பேரிழப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திரையுல கதை - வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் பணியாற்றி, பல மேடை நாடகங்களை இயக்கி, நடித்த கிரேசி மோகன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன ஒரு சோகமான நாள்.. வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது.. கிரேஸி மோகன் மறைவு.. பிரபலங்கள் அதிர்ச்சி!
அடிப்படையில் பொறியாளரான அவர், அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை - வசனகர்த்தாவாக விளங்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த கதை, வசன கர்த்தாவும் நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.