3வது கண் வந்த பின் குற்றமெல்லாம் நின்னு போச்சு.. போலீஸ் கமிஷனர் பெருமிதம்!
Recommended Video
சென்னை: காவல் துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட பின்பு சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகரில் குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 113 இடங்களில் 680 சிசிடிவி கேமராக்களும், சௌந்தரபாண்டியனார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 567 இடங்களில் 941 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து புதிதாக பொருத்தபட்ட 1621 கண்காணிப்பு கேமிராக்களின் இயக்கத்தினை தொடங்கி வைத்த பின் ஏ.கே. விஸ்வநாதன் பேசியதாவது: பொதுமக்களுக்கு சேவை புரிவதில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் நகரமாக சென்னை விளங்குகிறது. காவல் துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட பின்பு சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று கூறினார்.
மேலும், இந்நிகழ்வில் தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், தெற்கு மண்டல இணை ஆணையாளர் மகேஸ்வரி, தியாகராய நகர் மாவட்ட துணை ஆனையாளர் அரவிந்தன் மற்றும் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.