'தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை.. முதல்வர் தலைமையில் விரைவில் பாராட்டு விழா..' சீனிவாசன் பெருமிதம்
சென்னை: தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை என்று தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், தோனி நாடு திரும்பியவுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் கொரோனா பரவல் காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டில் பிளே ஆப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறிய சிஎஸ்கே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.
முழு பவர் கொடுத்த பிசிசிஐ.. நீல சட்டையை போட்டுகொண்டு இந்திய டீமோடு இணைந்த தோனி.. பிளான் என்ன?
ஐபிஎல் 2021
டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் லீக் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதலில் நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்திய சென்னை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியைக் கொல்கத்தா தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்தி 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா.
சென்னை சாம்பியன்
கடந்த அக். 15ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாகத் தொடக்க வீரர் டு பிளசிஸ் 86 ரன்களை குவித்தது. அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்குச் சிறப்பான ஒரு தொடக்கம் கிடைத்தாலும் கூட மிடில் ஆர்டர் சொதப்பியதால் 20 ஓவர்களில் 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 4ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
சீனிவாசன் பேட்டி
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஐபிஎல் போட்டியில் வென்ற கோப்பையைச் சென்னை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை முடிந்தவுடன் தோனி தமிழகம் வந்து ஐபிஎல் போட்டியில் வென்ற கோப்பையைத் தமிழக முதல்வரிடம் அளிப்பார்.
பாராட்டு விழா
ஐசிசி உலகக் கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணி ஒரு சிறந்த அணியாக உள்ளது. குறிப்பாக அணியின் ஆலோசகராக எம்எஸ் தோனி செயல்பட இருப்பது நல்ல தேர்வு. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி நாடு திரும்பியவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்குப் பாராட்டு விழா நடத்தப்படும். அந்த விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். அப்போதுதான் சிஎஸ்கே ரசிகர்களும் அதில் கலந்துகொள்ள முடியும்.
தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை
தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது பிசிசிஐ போடும் விதிமுறைகளைப் பொறுத்தே அமையும். ஆனால் சென்னை அணியில் நிச்சயமாக தோனி இடம் பெறுவார்" என்றார். அதேநேரம் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் ரெய்னா இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு அது குறித்து இப்போது பதில் சொல்லமுடியாது என்று அவர் கூறினார்.