சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை மகன் உயிரிழப்பு- 4 பிரிவுகளில் கொலை வழக்காக பதிவு செய்த சிபிஐ
சென்னை: சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்ததை கொலை வழக்காக பதிவு செய்துள்ளது சிபிஐ.
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். போலீசாரின் தாக்குதலில்தான் இருவரும் உயிரிழந்தனர் என்பது குற்றச்சாட்டு.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்தது.
சிபிஐ விசாரணைக்கு முன்னதாக சிபிசிஐடி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் உட்பட 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அட ஒரு மார்க்குகூட விடலை...பூரா மார்க்கையும் அள்ளிய உபி மாணவி!!
இதன் பின்னர் சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். கடந்த 3 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் போலீசார் மீது 302,341,201,109 ஆகிய கொலை வழக்குப் பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.