என்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக
சென்னை : சி.வி.சண்முகம் நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்..? இதுதான் இப்போது அதிமுகவில் ஹாட் பஞ்சாயத்தாக ஓடிக் கொண்டுள்ளது.
அதிமுக மாவட்டச்செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அதில் முக்கிய அமைச்சர்கள் 2 பேர் கலந்துகொள்ளாதது பெரும் பேசுபொருளாய் உள்ளது.
இதற்கான பின்னணி பற்றி நாம் விசாரித்ததில், சி.வி.சண்முகம் தனக்கு துணை முதல்வர் பதவி எதிர்பார்க்கிறார் என கூறுகின்றனர் ர.ர.க்கள். அந்தப் பதவியில் தான் ஏற்கனவே ஓ.பி.எஸ்.இருக்கிறாரே எனக் கேட்டதற்கு, இருக்கட்டும் அதனால் என்ன என நம்மிடம் எதிர்கேள்வி கேட்டனர்.
தமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா?.. பரபரக்கும் அரசியல் களம்
சற்று புரியும்படி விளக்குமாறு நாம் கேட்டதற்கு, ஆந்திரா பார்முலாவை பின்பற்றலாமே. சாதிக்கு ஒருவர் என 5 பேரை துணை முதல்வர் ஆக்கியிருக்காரே ஜெகன் என்றனர். தமிழகத்தில் ஏன் அப்படி செய்யக்கூடாது என்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களிடம் பேசிய போது, போகிற போக்கில் ஆயிரம் பேர் ஆயிரம் கூறுவார்கள் அதெல்லாம் உண்மையாகிவிடுமா என்று மறுத்தனர். தனது அண்ணன் ராதாகிருஷ்ணன் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் சி.வி.சண்முகம் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம்.
இதன் காரணமாகவே வெளிநிகழ்ச்சிகளில் கடந்த 2 நாட்களாக அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர். கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.