அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை
குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: நிதி குற்றவாளிகளும் பாலியல் குற்றவாளிகளும் நவீனத் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். சைபர் குற்றங்களைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை தடுக்க மிக நவீன வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. அத்தகைய நவீன வழிமுறைகளை நாம் முழுமையாக அறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்
சென்னை வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது இந்த பயிற்சியில் சிறந்து விளங்கிய துணை கண்காணிப்பாளர்களுக்குப் பதக்கங்களும், சிறப்பு வாளும் வழங்கப்பட்டது.
முதல்வர் பேச்சு
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்களது அணிவகுப்பு மரியாதையைக் கண்டு போது எனக்கே ஒரு கம்பீரம் தோன்றுகிறது. உற்சாகம் பிறக்கிறது. இன்னும் சொன்னால் மிடுக்கு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த அணிவகுப்பு கம்பீரமாக இருந்தது என்றார். துப்பாக்கி சுடுதல், சைபர் குற்றங்கள் தொடர்பான கணினி பயிற்சி, தடயவியல் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சி, போக்குவரத்தைத் திட்டமிட்டு நிர்வகித்தல், நடைமுறைப்படுத்துதல், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை பணி
இத்திறமைகளைப் பெற்று இதன் மூலமாக மக்களைக் காக்கும் மகத்தான பணிக்கு உங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். தீயதை பொசுக்கும் தீயாகவும், அனைவருக்கும் பொதுவான வானமாகவும் காவல் துறை இருக்க வேண்டும். குற்றங்களுக்குத் தண்டனை பெற்று தரும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். மக்களை காக்கும் மகத்தான பணிக்கு காவலர்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும்.
மக்களுக்கு அமைதி
அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகளைப் போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ஒரு அரசிடம் இருந்து முதலில் மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத் தான். அந்த அமைதியை ஏற்படுத்தித் தர வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.
தலைமைப்பொறுப்பு
புதிதாகக் காவல் களத்தில் இறங்கி உள்ள துணை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகச் சொல்லத் தக்க மனிதராக உங்கள் காவல்துறை தலைமை இயக்குநர் இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உதவி கண்காணிப்பாளராக பணிக்கு சேர்ந்த சைலேந்திரபாபு இன்று தமிழ்நாட்டுக் காவல் துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பும் முயற்சியும் மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அவரைப் போலவே பல்வேறு திறமைகளையும் நீங்கள் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்
குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்முறைகள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்களாக அடையாளம் காணப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் மிஞ்சியதாக சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. தொழில்நுட்பம் வளர வளர குற்றம் செய்வோர் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
குற்றவாளிகள் யார்
லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்ச்சீப் கட்டியிருந்தால் வழிபறி செய்பவர் என்பதைப் போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இன்று இணைய வசதி வந்ததற்குப் பிறகு அடையாளமற்ற முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டார்கள். இணையவெளி பொருளாதார குற்றங்கள் அதிகமாகி விட்டன.
நவீன வழிமுறை
சில இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. நிதி குற்றவாளிகளும் பாலியல் குற்றவாளிகளும் நவீனத் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை தடுக்க மிக நவீன வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. அத்தகைய நவீன வழிமுறைகளை நாம் முழுமையாக அறிய வேண்டும்.
தமிழக காவல்துறை
2030க்குள் சைபர் குற்றங்கள் நடக்காத நாடாக மாற்றிக் காட்டப் போகிறோம் என்று ஐக்கிய அரபு நாடுகளில் அறிவித்துள்ளது. எத்தகைய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதைத் தமிழ்நாடு காவல்துறை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நமது காவல்துறை நவீன மயமாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இன்டர்நெட் திருட்டு
முதல்வர் ஸ்டாலின் கூறிய சைபர் குற்றங்கள் எவை எவை என பார்க்கலாம். ஆன்லைன் சீட்டிங் தொடங்கி, பெண்களுக்கு கொடுக்கப்படும் பல தொந்தரவுகள் சைபர் கிரைமில் வருகிறது. ஹேக்கிங், ஆபசமாக மெஸேஜ் அனுப்புவது, கம்ப்யூட்டர், இன்டர்நெட் வழியாக திருடப்படுவது, அடுத்தவர்களின் டிஜிட்டல் கையெழுத்து பாஸ்வேர்டுகளை திருடுவது, போலி ஐடி உருவாக்கி, தன்னை வேறு ஒருவர் போல் காட்டி மிரட்டுவது, மோசடி செய்வது போன்றவை சைபர் குற்றங்களின் கீழ் வரும்.
ஆபாச படங்கள்
ஆண், பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான முறையில் வெளியிடுவது, சைபர் டெர்ரஸிஸம், இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது, ஆபாச போட்டோ வெளியிடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவையும் சைபர் குற்றமாகும். இந்த குற்றங்களுக்கு ஐ.டி. சட்டம் 2008ன் படி - மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் அதே போல் மேலும், ஒரு லட்சம் முதல் ஜந்து லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.
காவல்துறை உயரதிகாரிகள்
முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகக்கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தநிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகரன், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் பிரதீப் வி.பிலிப் நன்றியுரை ஆற்றினார்.