எந்தக் கட்சியை எதிர்த்து ஓடத் தொடங்கியதோ.. அதே கட்சியுடன் சேர்ந்து ஓட திரும்பி வந்த.. சைக்கிள்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மீண்டும் சைக்கிள் சின்னம் திரும்பி வந்துள்ளது. தமிழக அரசியல் அரங்கமும், மக்களும் மறக்க முடியாத ஒரு சின்னம் சைக்கிள். அது பிறந்த கதையே செ சுவாரஸ்யமானது.
இந்த சைக்கிளுக்குப் பின்னால் உள்ள வரலாற்றை இந்தக் கால ரஜினி ரசிகர்கள்தான் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.. ரஜினிக்கு கிடைத்த அபாரமான அரசியல் வாய்ப்பும் (அதை அவர் தவற விட்டதும்), இந்த சைக்கிள் வரலாற்றில் ஒளிந்துள்ளது.
1991 -1996 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த ஆட்சியில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டது. எதிர்த்து குரல் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு இரவில் ஆட்டோக்கள் சென்றன. கேள்வி கேட்ட பத்திரிக்கைகளின் குரல்வளை நெரிக்கப்பட்டது. "ம்" என்றால் சிறைவாசம், "ஏன்" என்றால் வனவாசம் இப்படித்தான் கடந்து சென்றது அந்த ஐந்து ஆண்டுகளும். அதன் பின்னர் இந்த ஆட்சி குறித்து ஜெயலலிதாவே மக்களிடம் மன்னிப்பு கோரியது வேறு கதை.
10 சீட் காங்கிரஸ்.. வேட்பாளர்களை அறிவிக்க ஏன் இந்த தாமதம்.. இவர்தான் காரணமா!
பிளந்தது காங்கிரஸ்
இந்த சூழலில் 1996 ம் ஆண்டு தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவர் பி.வி நரசிம்ம ராவ். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நரசிம்மராவோ நான் கூறியது கூறியதே காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாக கூறிவிட்டார்.
மூப்பனாரின் சைக்கிள்
வெறுப்படைந்த தமிழக தலைவர்கள் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி கே மூப்பனார் தலைமையில் ஒன்று கூடி ஒரு புதிய கட்சியை உருவாக்கினர். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்று பெயர் சூட்டினர். அப்போதுதான் இந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது. அதாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்கள் என்ற ஒரு காரணத்திற்காக காங்கிரசிலிருந்து வெளியே வந்தவர்கள் ஒன்று கூடி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியையும் உருவாக்கி சைக்கிள் சின்னம் பெற்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்கள்.
ரஜினியின் முதல் வாய்ஸ்
அப்போது சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. இரு தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமாகா சட்டமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றது மக்களவைக்கு நடந்த தேர்தலில் 20 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில்தான் முதன் முதலில் ரஜினி திமுக தமாக கூட்டணிக்காக வாய்ஸ் கொடுத்தார்.
சான்ஸை தவற விட்ட ரஜினி
உண்மையில் இந்தக் கட்சியை ரஜினியின் கட்சியாகவே மக்கள் பார்த்தனர். ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வர மூப்பனாரும் கடுமையாக முயற்சித்துப் பார்த்தார். ஆனால் திமுகவின் சாதுரியத்தால் அது தடைபட்டுப் போனது. திமுவை இதில் குறை சொல்ல முடியாது. காரணம், ரஜினிக்கே அரசியலில் நுழைய அப்போது பெரும் தயக்கம் (இப்போது அதை விட தயக்கம்). இதனால் அண்ணாமலை வெறும் வாய்ஸோடு நின்று கொண்டா். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார்.
தொடர்ந்து வெற்றி
அப்போது ஓடத் தொடங்கிய தமாகவின் சைக்கிள் 1998 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது. அதன் பின்னர் 1999 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விசிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிட்டது. ஆனால் எங்கும் வெற்றியை பெறவில்லை.
காங்கிரஸுடன் ஐக்கியம்
அதன் பின்னர் 2001 ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூப்பனார் யாரை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கினாரோ அதே ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் 23 இடங்களில் வெற்றியும் பெற்றது தமாகா. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூப்பனார் மறைந்தார். அதன் பிறகு மூப்பனாரின் மகன் ஜி.கே வாசன் தமாகவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். அவரது வருகைக்குப் பிறகு அவருக்கும் டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக தமாகா எங்கிருந்து பிரிந்து வந்ததோ அதே காங்கிரஸ் கட்சியோடு இரண்டற கலந்து விட்டது. அப்போது வாசன் கப்பல்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
மறு பிறவி எடுத்த தமாகா
அதன் பின்னர் காலச்சக்கரத்தின் சுழற்சியில் மீண்டும் காங்கிரசோடு கருத்து முரண்பட்ட ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். அதாவது அவர் தமாகாவை காங்கிரசோடு இணைத்தபோது தமாகாவை கலைக்கவில்லை. அந்த கட்சிப் பதிவை புதுச்சேரியை சேர்ந்த நிர்வாகிகள் நாங்கள் இதை தொடர்ந்து நடத்துகிறோம் என்று கூறியதால் அந்தப் பதிவு அப்படியே தொடர்ந்தது. இதை தெரிந்து கொண்ட ஜி.கே வாசனும் நிர்வாகிகளும் அந்த பதிவை மீண்டும் உயிர்ப்பித்து தமாகாவை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.
பறக்க வந்த சைக்கிள்
தமாகா நடைமுறைக்கு வந்தாலும் மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் அப்போது அந்த சின்னம் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை கொடுக்க மறுத்துவிட்ட்டது. தென்னந்தோப்புதான் கிடைத்தது. இப்படியாக வந்த தமாகா இப்போது மீண்டும் யாரை எதிர்த்து ஒரு கட்சியாக உருப்பெற்றதோ அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் அதே சைக்கிள் சின்னத்தையும் பெற்றுள்ளது. தமாகாவின் வரலாறு மிகக் குறுகிய காலத்தை கொண்டது. பிறந்ததும் மாபெரும் வரலாறு படைத்து காலப் பிரளயத்தில் சிக்கி கரைந்து போன துயரத்தைக் கொண்டது. மீண்டும் தமாகா மறு மலர்ச்சி பெறுமா.. பார்க்கலாம்.