அம்பன் புயலால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும்.. வானிலை மையம்
சென்னை: அம்பன் புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று மாலை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான அம்பன் புயல் தற்போது கடுமையான புயலாக மாறியுள்ளது. நேற்று கொல்கத்தாவில் இருந்து 690 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
ஆனால் இந்த புயல் இன்று காலை நிலவரப்படி ஒடிசாவின் பாரதீப்பிலிருந்து தெற்கே 250 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளத்தின் திகாவிலிருந்து 390 கிமீ தென்மேற்கிலும், பங்களாதேஷில் கெபுபராவில் இருந்து 540 கிமீ தென்மேற்கிலும் அமைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நாடுகள்.. அதிகரித்தும் வரும் நாடுகள்.. விவரம்
ஈரப்பதத்தை உறிஞ்சும்
இப்புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் மேற்கு வங்க கடற்கரையை இன்று மாலை அல்லது இரவில் அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும்.
42 வரை அதிகரிக்கும்
இதன் காரணமாக இந்தியா முழுவதுமே வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் காற்று தாமதமாக வரும். அதனால், வெயில் 42 டிகிரி முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதனால் தமிழகத்தில் 6 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதன்பிறகு தென்மேற்கு பருவமழை மே இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதால் படிப்படியாக வெயில் குறையும்.
சேதம் கடுமையாக இருக்கும்
தமிழகத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு புயல் வங்கக் கடலில் இப்போது தான் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1999ம் ஆண்டு இது போன்ற புயல் வந்தபோது கடல் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. தற்போது இந்த புயல் கடும்புயலாக வலுவடைந்துள்ளதால், கரையைக் கடக்கும் போதும் வலுவிழக்க வாய்ப்பு இல்லை. இந்த புயலால் கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 14 லட்சம் மக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
எங்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 155 -165 கிலோ மீட்டர் வரையிலும், சில நேரங்களில் 185 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.