இலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் 'புரேவி'
சென்னை/கொழும்பு: இலங்கையில் ஈழத் தமிழர் நிலப்பகுதியான மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே நாளை மாலை புரேவி புயல் கரையை கடக்கிறது. இந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழக கடற்பரப்பான மன்னார் வளைகுடாவுக்குள் நுழைகிறது.
நிவர் புயல் சென்னை, புதுவை, கடலூர் பகுதிகளை நோக்கிய வங்க கடற்பரப்பில் உருவானது. இது புதுவை- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் தரைவழியாக திருவண்ணாமலை, வேலூருக்குள் நுழைந்து ஆந்திராவுக்கு போனது.
வங்க கடலில் சென்னைக்கு அருகே உருவாகும் சில புயல்கள் கரையை கடந்த நிலையில் ஊழிக்காற்றாக உள்மாவட்டங்களைத் தாக்கி பெங்களூரு நோக்கி நகர்வதும் உண்டு. இம்முறை புரேவி புயலானது வங்கக் கடலில்தான் உருவாகி இருக்கிறது.
புயல்.. தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. ரேஷன் கார்டு உஷார்.. முதல்வர் கோரிக்கை
இலங்கை அருகே புயல்
ஆனால் மன்னார் வளைகுடா பகுதியிலோ சென்னை- கடலூர் பகுதியிலோ அல்லாமல் இலங்கைக்கும் வெகு தொலைவில் உருவாகி இருக்கிறது இந்த புயல். இலங்கையின் வடபகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம்தான் நமது மன்னார் வளைகுடாவை தமிழகத்தை ஒட்டிய பகுதி. திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவை இலங்கையின் கிழக்கு பகுதிகள்.
திருகோணமலையில் இருந்து 500 கி.மீ
இப்போது உருவாகி உள்ள ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையின் கிழக்கில் திருகோணமலை- அந்தமானுக்கும் கீழே வெகுதொலைவிலான கடற்பரப்பில் இருக்கிறது. இலங்கை வானிலை மையத்தின் அறிக்கையின் படி திருகோணமலையில் இருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
மட்டக்களப்பு- பருத்தித் துறை இடையே..
இதுதான் புரேவி புயலாக நாளை வலுவடைகிறது. அப்படி வலுவடையும் புரேவி புயலானது இலங்கையின் கிழக்கு கடற்பரப்பு என குறிக்கப்படும் மட்டக்களப்பு தொடக்கம் பருத்திதுறை இடையே கரையை கடக்கும் என்கிறது இலங்கை வானிலை அறிக்கை.
மன்னார் வளைகுடாவுக்குள் என்ட்ரி
அப்படி கரையை கடக்கும் புயலானது தரைவழியே நகர்ந்து இலங்கையின் வடபகுதியான மன்னார் பகுதி நோக்கி நகரும். மன்னாரை தொடர்ந்து மன்னார் வளைகுடா எனப்படும் நமது தமிழக கடற்பகுதிக்குள் நுழையும். மன்னார் வளைகுடாவுக்குள் புரேவி புயல் நுழையும் போது ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை பலத்த காற்றுடனான அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.
முதலில் இலங்கையில்தான் கரை கடக்கிறது
மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் புரேவியார், அப்படியே புயலாகவே தமிழக கரையை கடக்கப் போகிறாரா? இல்லையா? என்பதை வானிலை மையம் பின்னர் விரிவாக தெரிவிக்கும். ஆகையால் இந்த புரேவி புயல் நாளை மாலை தமிழகத்தில் கரையை கடக்கவில்லை. முதலில் இலங்கையில் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையேதான் கரையை கடக்கிறது...அதன்பின்னரே நம்மை எட்டிப் பார்க்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்!