நாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்?.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா?
சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புரேவி புயல் நாகப்பட்டினம் நோக்கி செல்வதாக சாட்டிலைட் வரைப்படங்கள் காட்டுவதால் மழையே இல்லாத டெல்டா மாவட்டத்திற்கு மழையை மட்டும் வாரி வழங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
புயல்களில் எத்தனையோ வகை உள்ளன. சில புயல்கள் ருத்ரதாண்டவம் ஆடும், சில பேயாட்டம் ஆடி விடும். சில புயல்கள் மழை, வெள்ளம், காற்று என பெரிய சேதாரத்தை உண்டு செய்யும்.
இன்னும் சில நமத்து போன பட்டாசு மாதிரி கரையை கடக்கும் நேரத்தில் வலுவிழந்துவிடும். சில குறைந்த அளவிலான சேதாரத்தை உண்டாக்கி அடுத்த கோடைக்கு தேவையான மழை வாரி வழங்கும்.
கடலூரில் முறிந்த வாழை மரங்கள்.. கனிவுடன் விசாரித்த முதல்வர்.. நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி
அதி தீவிர புயல்
அது போன்றதொரு புயல்தான் நிவர். இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றதை அடுத்து காற்று மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் வீசும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த புயல் கரையை கடக்கும் நேரத்தில் சற்று வலுவிழந்ததால் மக்கள் அச்சப்பட்ட அளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தவில்லை.
சென்னையில் தண்ணீர் பஞ்சம்
எப்போது கோடை காலம் வந்தாலும் சென்னையை தண்ணீர் பஞ்சம் அண்டும். ஆனால் இந்த முறை சென்னைக்கு தேவையான சராசரி மழை பொழிவை நிவர் கொடுத்துள்ளது. அத்துடன் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் இந்த கோடைக் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என தெரிகிறது.
உள் மாவட்டங்கள்
இந்த நிவர் புயல் வடமாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என மழையை அள்ளி கொடுத்துவிட்டது. ஆனால் டெல்டா மாவட்ட மக்களை ஏமாற்றியது. இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு ஆறுதலாக புரேவி புயல் நவம்பர் 29-ஆம் தேதி உருவாகிறது. இந்த புயல் தமிழகத்திற்குத்தான் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேதாரண்யம்
அந்த வகையில் மிகவும் பிரபலமான தனியார் சாட்டிலைட் செயலியில் பார்க்கும் போது புரேவி புயல் டிசம்பர் 2-ஆம் தேதி கரையை கடக்கத் தொடங்குகிறது. இது இலங்கையின் ஜஃப்னாவை லேசாக தொட்டுவிட்டு அப்படியே நாகப்பட்டினம், வேதாரண்யம் நோக்கி வருவது போல் தெரிகிறது.
கஜா புயல்
ஒரு வேளை இந்த கணிப்புகள் நடந்தால், டெல்டா மாவட்டங்களுக்கு மழையை மட்டுமே அள்ளித் தர வேண்டும். எந்த வித சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் நீர் ஆதாரத்தையும் நீர் தேவையையும் போக்க வேண்டும். நிவரை போல் புரேவியும் டெல்டா மாவட்ட மக்களின் செல்லப் பிள்ளையாக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா, கஜா புயலால் வாழ்வாதாரத்தையே தொலைத்தது போல் செய்யாமல் மழை கொடுக்கும் வள்ளல் ஆகுமா புரேவி?