இலங்கையில் கரையை கடந்து, தமிழகத்தின் வழியே பயணிக்கும் புரேவி புயல்.. தென் மாவட்டங்களில் அலர்ட்
சென்னை: புதிதாக உருவாகும் புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும் மழை பெய்யும் என்பதால், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவர் கூறியதாவது:
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் நிலையில், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கடற்கரைக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகள்
செயற்கைகோள் தொலைபேசி மூலமாக அவர்களை கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நிவாரண முகாம்கள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும். நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள உபரி நீரை முன்கூட்டியே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு படை
இதற்காக, அதிகாரிகள் குழு தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். இதனிடையே புயல் முன்னெச்சரிக்கையாக 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், இன்று, கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் சென்றடைந்துள்ளனர்.
இன்று மழை பெய்யும் இடங்கள்
புரேவி புயல், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை இலங்கையின் திரிகோணமலை பகுதி வழியாக கரையை கடந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள் மேலே பயணித்து, அரபிக் கடலை சென்று அடையும். இதையடுத்து, இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். அதே நேரம், நாளை, டிசம்பர் 2ம் தேதி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதீத கன மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் அதீத கன மழை
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும். தெற்கு கடலோர மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும், மணிக்கு, 65 கி.மீ. வேகம் வரை, சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.