நாடு விட்டு நாடு ...இலங்கையில் இன்று மாலை புரேவி புயல் கரையை கடந்து தமிழகம் நோக்கி நகரும்!
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரேவி புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்த நிலையில் மன்னார் வளைகுடாவில் நுழைந்து தமிழகம் நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் புயல்கள் பொதுவாக தமிழக கடற்பரப்பை நோக்கி நகருவதாக இருக்கும். ஆனால் புரேவி புயல் இம்முறை இருநாடுகளில் கரையை கடக்கிறது.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரேவி புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புரேவி புயல் தற்போது இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலையில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.
இப்புரேவி புயல் இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பான மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடக்கிறது. இதனால் இலங்கையில் அதீத கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது கரையை கடந்த நிலையிலும் புரேவி புயலாகவே மன்னார் வளைகுடாவுக்குள் நாளை அதிகாலை நுழைந்து தமிழகத்தை நோக்கி நகருகிறது.
தமிழக கடற்பரப்பில் ஒருநாள் முழுவதும் பயணிக்கும் புரேவி புயல் நாளை மறுநாள் டிசம்பர் 4-ந் தேதி பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்க உள்ளது. இதனால் தென்தமிழகம், கேரளாவில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், கேரளாவின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இப்புரேவி புயல் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளின் கரையை கடக்கும் சிறப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.