வலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று கரையை கடக்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவில் நுழைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. ஆனால் இந்த புயலானது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்.
இதனிடையே தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை நகரின் பல இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாகி உள்ளன.
இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரியில் சாரல் மழை பெய்து வருகிறது.