நெருங்கி வரும் ஃபனி புயல்.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு!
சென்னை: ஃபனி புயலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை இந்த வாரம் ஃபனி புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. தமிழகத்தில் வடமாவட்டங்களில் இந்த புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைதான் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த மண்டலம் இன்று இரவு வலுவடையும். நாளை மாலைக்குள் இது புயலாக மாறும், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கஜா பாதிப்பே இன்னும் அகலவில்லை.. அதற்குள் வந்துவிட்டது ஃபனி புயல்.. அரசு இப்போதாவது சுதாரிக்குமா?
இந்த புயலால் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் அதே சமயம் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழு தாயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் உள்ளது. அரக்கோணத்தில் 4, சென்னையில் 2 என தமிழகத்தில் 6 தேசிய பேரிடர் மீட்புக்குழு இருக்கிறது.
இந்த குழுக்கள் மொத்தமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு படகுகள், அவசர சிகிச்சை மருந்துகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.