உருவானது பேய்ட்டி புயல்.. ஆந்திராவில் 17ம் தேதி கரையைக் கடக்கும்.. சென்னைக்கு மழை எச்சரிக்கை
புயல் காரணமாக வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு என தகவல்.
Recommended Video
சென்னை: வங்க கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பேய்ட்டி புயலாக மாறியுள்ளது.
புரட்டி போட்ட கஜாவுக்கு பிறகு அடுத்தடுத்த புயல்கள் தமிழகத்துக்கு வர இருக்கின்றன என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் கஜா அளவு தீவிரமான புயல் இருக்காது என்றும் இந்த புயல்கள் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பேய்ட்டி புயல் உருவாகியுள்ளது. இது சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.
பேய்ட்டி புயல்
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் பேய்ட்டி புயலானது தற்போது மசூலிப்பட்டனத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரப் புயலாக மாறும்.
கரையை கடக்கும்
இந்தப் புயல் வருகிற 17-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம்
இதன் காரணமாக, வடதமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடல் கொந்தளிப்பு
தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அதனால் இந்த பகுதிகளுக்கு சனி, ஞாயிறு இரு தினங்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தி இருந்தார்.
கடலுக்கு செல்லவில்லை
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்ற எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று 2-வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை கூண்டு
மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக எண்ணூர், சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.