கஜா புயல் நிவாரணம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Recommended Video
சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கஜா புயலானது, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அடியோடு சாய்த்து புரட்டி போட்டு சென்றுவிட்டது.
இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்வை தொலைத்து இருக்கிறார்கள். வீடு, வாசல், தோட்டம், நிலபுலன்கள், உள்ளிட்டவற்றை இழந்து, சாப்பாடு, தண்ணி, கரண்ட் இல்லாமல் இன்னமும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.
கஜா: நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
இழப்பீடு அறிவிப்பு
இதனிடையே கஜா புயலால் உயிரிழந்த 45 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
கஜா புயல் பாதிப்பு
இந்த நிலையில்தான், புயல் சேதம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவாரூரில் நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கஜா புயலால் வீடு, கால்நடைகள், மரங்கள் ஆகியவற்றை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். மேலும் கஜா புயல் பாதிப்பு குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அமைச்சர்கள், அதிகாரிகள்
அதன்படியே இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்ட,த்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
டெல்லி செல்கிறார்
இந்த கூட்டத்தின் ஆலோசனையை தொடர்ந்து, கஜா புயலின் சேதம், இழப்பு, நிலவரம் குறித்து ஒரு ஆய்வறிக்கையாக தயார் செய்யப்படும். அந்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் நேரில் தந்து, மத்திய அரசின் நிவாரண நிதியை கேட்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 22-ம் தேதி அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவும் உள்ளார்.