முழு நேர அரசியல்வாதிகளுக்கு கமல் எவ்வளவோ பெட்டர்!
கமலின் நாகை சுற்றுப்பயணம் எப்படி இருந்தது?
சென்னை: உண்மையிலேயே கமலின் 2-வது சுற்றுப்பயணம் அவரை ஒரு படி மேல தூக்கி கொண்டு போய் நிறுத்தி உள்ளது.
முதல்கட்டமாக புயல் பாதித்த மக்களை கமல் பார்க்கபோனதே நிறைய எதிர்பார்ப்பு கிளம்பியது. புயல் பாதித்தவுடனேயே எல்லோரும் கைகோர்க்க வேண்டும் என்று சொன்னார்.
பின்னர் "சாய்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது, அது சரியல்ல என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். புயல் சேதத்தின் உண்மையான மதிப்பை அரசு வெளியிடவில்லை என்றும் தன் ஆதங்கத்தை சொன்னார்.
வழி விட்ட மக்கள்
அமைச்சர்கள் ஒருவரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை என்று மண்டை நிறைய கோபத்துடன் திருவாரூர் அருகே மக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்க, அந்த வழியாக வந்த நிவாரண பொருட்களுடன் வந்த கமலுக்கு வழிவிட்டு நின்றபோதே கமல் மீது யாருக்கும் எந்த கோபமும் அவ்வளவாக இல்லை என்று தெரிந்துவிட்டது.
பஸ்சில் பயணம்
இந்நிலையில் நேற்று 2-வது சுற்றுப்பயணமாக நாகைக்கு சென்றார். காலையில் அங்கு சென்றதிலிருந்தே ஒரு அந்த மாவட்டத்தையே ஒரு கலக்கு கலக்கிவிட்டார் கமல். முதலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் நின்று பேசி,அவர்களின் குறைகளை கேட்டார். பிறகு திடீரென பஸ்சில் ஏறி டிக்கெட் வாங்கி கொண்ட மற்ற பயணிகளோடு சேர்ந்து மற்றொரு கிராமத்துக்கு சென்றார்.
டீக்கடை பெஞ்சு
தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் டீக்கடையில் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து தன் கட்சியினருடன் டீ குடித்தார். அவரை பார்த்ததும் எல்லாருக்குமே ஷாக் ஆனது. அந்த ஷாக்கோடு ஷாக்காக அங்கிருந்த எல்லோருக்குமே ஒரு டீயை வாங்கி கொடுத்தார்.
கன்னத்தை வருடினார்
அந்த டீக்கடைக்கு வந்த பாட்டி கன்னத்தை பிடித்து, பாசமாக பேசி அவர் குறைகளையும் கேட்டார். செல்லும் வழியில் இபி ஊழியர்களின் பணியை பார்த்ததும் அவர்களிடமே வந்து நின்று பாராட்டும், வாழ்த்தும் சொன்னார். உடனே மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரைக்கு சென்றார்.
மீனவர்கள் நிலை
மீனவ மக்கள் கமலை சூழ்ந்துகொண்டு குறைகளை புலம்பி தள்ளிவிட்டார்கள். இதுவரைக்கும் எங்களை பார்க்க யாருமே வரல சார் என்று சொல்லி கண்ணீர் வடித்தனர். உண்மையிலேயே அந்த கிராமத்தினை பார்த்து கமல் கொஞ்சம் அப்செட்தான். ஏனென்றால், மீனவர்களுக்கு படகுகள் இல்லை, வீடுகள் இடிந்து கிடக்கிறது, மீன்பிடி வலைகளும் இல்லை.
பேச்சை நிறுத்த வேண்டும்
இதெல்லாம் நேரில் பார்த்தவுடன்தான் கமல் சொன்ன முதல் வார்த்தை, "அமைச்சர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வேகமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும்" என்பது. வழக்கம்போல் கமலின் இந்த 2-ம் கட்ட சுற்றுப்பயணத்துக்கும் அமைச்சர்களிடமிருந்து விமர்சனங்கள் வரத்தான் செய்தது. "கஜா புயல் நிவாரணப் பணிகளை 3 மணி நேர படம் போல் முடித்துவிட முடியுமா?" என்று அமைச்சர் உதயகுமார் நேற்று கேள்வியும் கேட்டிருந்தார்.
நன்றாகவே புரியும்
ஆனால் நாகை பக்கம் கமல் போனது ஒருநாள்தான்... இதன் மூலம் கமலை பற்றி அப்பகுதி மக்களும், அந்த மக்களின் உண்மை நிலைமையை கமலும் நன்றாகவே புரிந்து வைத்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம்.