புயல் பாதிப்பு நிதி கோர இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி
முதல்வர் இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
Recommended Video
சென்னை: புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு செல்ல உள்ளார். வியாழக்கிழமை அதாவது நாளை காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.
கஜா புயலுக்கு நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. சுழன்று வீசிய கஜா 50-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி சென்றது.
இதில் குடிசைகள் பறந்தன.. பயிர்கள் நீரில் மூழ்கின. எண்ணற்றோர் வீடு, வாசல் இன்றி மட்டுமல்லாமல், தண்ணீர், உணவின்றியும் இன்னமும்கூட தவித்து வருகிறார்கள்.
ஆய்வுக்கூட்டம்
தற்போது தமிழக அரசு, தனியார் அமைப்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்வந்து உதவி கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நேரில் ஆய்வு
இந்த கூட்டத்தில் புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல்வர் பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
புயல் பாதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது புயல் பாதிப்பு, சேதத்தின் மொத்த மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட உள்ளது
டெல்லி பயணம்
இந்த பட்டியலை முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் தர உள்ளார். இதற்காக இன்று மாலை முதல்வர் டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல உள்ளார். நாளை காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவதுடன், புயல் சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையையும் பிரதமரிடம் தர இருக்கிறார்.
மத்திய குழு
அதன்பின்னர் தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு ஒன்றையும் உடனே அனுப்பி வைக்குமாறும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுக்க உள்ளார். பிரதமருடனான தமது சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அன்றைய தினமே முதல்வர் முழு விவரங்களை தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.