அரபிக் கடலில் மையம் கொண்ட மகா புயல் தீவிரமடைந்தது- மீனவர்களுக்கு எச்சரிக்கை
Recommended Video
சென்னை: அரபிக் கடலில் உருவான மகா புயல் வலுவானதாக தீவிரமடைந்துள்ளன. இதனால் நவம்பர் 4-ந் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவானது. இதனைத் தொடர்ந்து மகா என்ற மற்றொரு புயலும் உருவெடுத்தது.
முன்னர் மகா புயல் தீவிரமடைந்து லட்சத் தீவுகளை கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது. இரு புயல்களால் கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மகா புயல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது தீவிர புயலாக உருவெடுத்திருக்கிறது.
மேலும் இப்புயலானது அமிந்தி தீவுகளுக்கு வடகிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும் , கோழிக்கோட்டுக்கு வடமேற்கில் 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நவம்பர் 4-ந்தேதி வரை அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.