நெருங்கும் புயல்..புதுச்சேரி, காரைக்காலுக்கு ரெட் அலர்ட்..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்காலிலும் இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை டிசம்பர் 9ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல்ங்க.. இன்றும் நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அறிவித்தார் வேலூர் கலெக்டர்
புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் கொண்டு சென்று தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் 240 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதனிடையே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இவர்கள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் புயல் மற்றும் கனமழையின் போது கடல் சீற்றம் ஏற்படுவதால் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.