மாண்டஸ் புயல்..ரெட் அலர்ட்.. தலைமைச் செயலர் அவசர ஆலோசனை..பறந்த உத்தரவு
சென்னை: மாண்டஸ் புயல் வட தமிழக கடலோரத்தை நெருங்கி வருவதால் வட தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 3 நாட்கள் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
பிரியங்காவின் ‛பக்கா’ ஸ்கெட்ச்.. இமாச்சலில் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்.. வெற்றியின் ரகசியம் இதுதான்!
ஆலோசனைக் கூட்டத்தில் சென்னையில் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வருவாய் பேரிடர் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக வேலூர், திருவள்ளூர், மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பல்வேறு கடலோர பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்கானித்து வருகின்றனர். அதைப்போல் உணவுக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் தயாராக இருப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
காற்று அதிகமாக வீசக்கூடிய நிலையில் மக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலை எதிர்க்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்ததுள்ளது. பல்வேறு விதமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். புயலால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கருதப்படும் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு,கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.