நிவர் புயல்.. 7 மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. உச்சகட்ட அலெர்ட்!
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை , கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
நிவர் புயல் நாளை பிற்பகல் காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையை கடக்கும் போது,. சென்னை தொடங்கி நாகப்பட்டினம் வரை உச்சகட்டமழை பெய்யும், 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் மோசமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நிவர் புயலாக உருவெடுக்கிறது.. வெளுக்க போகும் மழை! வானிலை அப்டேட்!
பேருந்து சேவை ரத்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிவர் புயல் குறித்து நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து புயல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை இன்று மதியம் பிற்பகல் 1 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுகிறது .
ரயில்கள் ரத்து
மேற்கண்ட மாவட்டங்களில் மக்கள் கார், பைக் போன்றவற்றில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை தஞ்சை இடையே இன்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, நாளை சென்னை தஞ்சை, சென்னை திருச்சி இடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்வாரியம் அதிரடி
புயல் கயை கடக்கும் கடலூர் மாவட்டத்தில் 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சென்னையில் 2 குழுவும் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபடும். மின்வாரியம் சார்பில் 1000 பணியாளர்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பம், மரம் அறுப்பான், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்துள்ளளனர். புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
புயல் இரண்டு வாய்ப்பு
புயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், பெரும்பாலான புயல்கள் பசிபிக் கோடுகள் மூலம் நகர்த்தப்படுவதால் மேல்நோக்கித்தான் புயல் நகர்ந்து செல்லும். கீழ்நோக்கி நகர்ந்து செல்வது மிகவும் அரிதானது. அப்படி கீழ்நோக்கி நகரும் புயல்கள் வலுவடைய வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலையில் நிவர் புயல் கரையை கடக்க இரண்டு வாய்ப்பு உள்ளது. ஒன்று நிவர் புயல் வலுவிழுந்த புயலாக மாறி டெல்டா பகுதிகளில் கரையை கடக்கும். இரண்டாவது வலுவான புயலாக மாறினால் காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றார்கள். சென்னை காரைக்கால் இடையே கரையை கடக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்கள்.