அதிக சப்தம்.. சங்கடப்படுத்தாமல் சமர்த்தாக நகர்ந்த நிவர்.. ஆனா கடலூரில் மட்டும் அசடா இருந்திடுச்சே!
சென்னை: சென்னையில் பெருமளவு பாதிப்பில்லாமல், வந்த சுவடு தெரியாமல், நிவர் என்றால் தற்காப்பு, பாதுகாப்பு என்ற அர்த்தத்திற்கேற்ப சென்றுவிட்டது. என்ன! சென்னை மக்களிடம் நற்பெயரை வாங்கியது போல் கடலூர், விழுப்புரம் வாசிகளிடமும் நற்பெயரை பெற்றிருக்கலாம்.
நிவர் அதி தீவிர புயலாக மாறியதை அடுத்து அதன் காற்று 145 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்பதையும் வைத்து கஜா, வர்தா போல் துவம்சம் செய்யலாம் என கருதப்பட்டது. ஆனால் இந்த புயலோ சமர்த்தாக வந்து நல்ல படியாக போய்விட்டது.
கடந்த 21-ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்தமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டது.
வங்கக் கடலில் இரு காற்றழுத்தங்கள்.. எங்கே செல்கின்றன?.. சாட்டிலைட் வீடியோவை பாருங்கள்
அர்த்தம்
இதை ஈரான் நாடு வைத்தது. இந்த பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை பார்த்தால் ஆங்கிலத்தில் Prevention என இருந்தது. தமிழில் தற்காப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை என அர்த்தம் வருகிறது. எனவே இந்த புயல் பெயருக்கேற்ப தமிழகத்தை பாதுகாத்து மழையை மட்டும் தந்து விடுமா அல்லது கோரத்தாண்டவம் ஆடுமா என சந்தேகம் இருந்தது.
அதி தீவிர புயல்
இந்த புயல் நேற்று முன் தினம் அதி தீவிர புயலாக மாறியது. முதலில் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதி தீவிர புயலாக மாறியதால் 145 கி.மீ. வேகத்தில் வீசும் என சொல்லப்பட்டது. நேற்று இரவு கரையை கடக்க தொடங்கியது. வட மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அச்சம்
இதனால் சென்னை உள்ளிட்ட பகுதி மக்கள் அச்சத்துடனேயே இரவை கழித்தனர். இந்த புயலின் முன் பகுதி, மைய பகுதி, கண் பகுதி என 3 பகுதிகளும் கரையை கடந்த நிலையில் சென்னையில் பெரும் அளவுக்கு சேதாரம் இல்லை என்றே சொல்லலாம். இதே வர்தா, தானே போல் இருந்திருந்தால் இந்நேரம் சென்னையை அலங்கோலம் செய்திருக்கும்.
மீனவர்கள்
ஆனால் நிவரோ நல்ல மழையை கொடுத்துவிட்டு குறைந்த அளவில் மரங்கள் முறிந்து போதல், சில இடங்களில் மின் வயர் அறுந்தது உள்ளிட்டவற்றை தந்தது. புறநகர் பகுதிகளில் ஏரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வழக்கமாக சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவது இயற்கைதான். சென்னையை சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த படகுகளுக்கு எந்தவித சேதாரத்தையும் ஏற்படுத்தவில்லை.
பயிர்கள் நாசம்
ஆனால் கடலூரிலும் விழுப்புரத்திலும் பயிர்கள் நாசம், மரங்கள் முறிவு, மின்கம்பங்கள் சாய்ந்தது என நிகழ்ந்தது. ஆனாலும் விழுப்புரம், கடலூர் அருகே கடலோர மீனவ கிராமங்களிலும் படகுகளுக்கு எந்த சேதாரத்தையும் இது ஏற்படுத்தவில்லை. இதனால் அதிகமான சப்தத்தையோ மக்களுக்கு சங்கடத்தையோ கொடுக்காமல் அமைதியாகவே நகர்ந்து சென்றுவிட்டது நிவர்.