தமிழகத்தை தாக்கும் நிவர் புயல்.. இன்றிலிருந்து 3 நாட்கள்.. எந்தெந்த நாளில் எங்கெங்கு மழை பெய்யும்?
சென்னை: தமிழகத்தை வரும் 25ம் தேதி நிவர் புயல் தாக்க உள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களில் எங்கெங்கு எப்போது மழை பெய்யும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உச்சம் பெற்றுள்ளது. இன்றிலிருந்து மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் இடையில் சில நாட்கள் வெயில் அடித்தது. இந்த நிலையில்தான் தமிழகத்தை நிவர் புயல் தாக்க உள்ளது.
எப்படி
வங்கக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும். நிவர் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த புயல் சென்னை - மஹாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
வாய்ப்பு
இந்த நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்றிலிருந்து மழை தீவிரம் அடையும். இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருச்சி, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை
நாளையும் டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்யும். நாளை புயல் வலிமை பெறும் என்பதால், மோசமான சேதங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நாளை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல்
புயல் காரணமாக 25ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்து உள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என்று தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட் அலெர்ட்
தமிழகத்திற்கு 25ம் தேதி ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25ம் தேதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. புயல் கரையை கடந்த பின் சென்னையில் நல்ல மழை பெய்யும்.
சென்னை மோசம்
இந்த புயல் காரணமாக சென்னை பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. சென்னையில் ஏற்கனவே ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் 25ம் தேதி பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.