6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்
சென்னை: வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுவடைந்து இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலானது நேற்று 5 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியது. ஆனால் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் 3 மணிநேரமாக ஒரே இடத்திலேயே நிவர் புயல் மையம் கொண்டிருந்தது.
பின்னர் மணிக்கு 5 கி.மீ.வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது நிவர் புயல். இதனால் இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட புயல் இன்று இரவுதான் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நிவர் புயல் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
145 கிமீ வேகம்.. கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்
6 மணிநேரமாக 6 கி.மீ வேகம்
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகருகிறது. கடலூருக்கு கிழக்கு- தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவில் இது நகர்ந்து வருகிறது.
எந்த இடத்தில் நிவர்?
புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்க்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 370 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது நிவர் புயல். அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக நிவர் புயல் வலுவடையும்.
இன்று இரவு கரையை கடக்கும்
அடுத்த 6 மணி நேரத்துக்கு மேற்கு- தென்மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையை நோக்கியும் நிவர் புயல் நகரும். பின்னர் இன்று (நவ.25) இரவு தமிழகம்- புதுவை கடலோரத்தில் அதாவது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையை கடக்கும்.
உக்கிரமான புயல் காற்று
நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120, 130 கி.மீ முதல் 145 கி.மீ. வரையில் புயல் காற்று வீசக் கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.