Nivar: இது திருமண காலம்.. முதல்ல கொரோனா கெடுத்துச்சு.. இப்ப நிவர்.. அத்தை மகளை காண முடியலையே!
சென்னை: ஐப்பசி மாதம் திருமணம் உள்ளிட்ட சுபவிசேஷங்கள் நடத்தக் கூடிய மாதம். இந்த மாதத்தில் புயல் எச்சரிக்கை வேறு விடுக்கப்பட்டுள்ளதால் விழாக்கள் களையிழக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
திருமணம் என்றாலே மண்டபம் முழுவதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கிண்டல், கேலி, புரளி, மாமன் மச்சான் சண்டை, அத்தை பெண்களை வம்பிழுப்பது என விழாவே களைகட்டும்.
இதெல்லாம் எப்போது வரை? இந்த கொரோனா வரும் வரை, ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
சாட்சிக்கு 4 பேர்
இன்னும் சொல்ல போனால் மண்டபங்கள் திறக்க அனுமதியில்லாததால், ஏதோ காதல் திருமணம் போல் சாட்சிக்கு 4 பேர் வந்து வாழ்த்தும் அளவுக்கே உள்ளன. வசதியற்றவர்கள், வேண்டிக் கொண்டவர்கள், ஆடம்பரத்தை விரும்பாதவர்கள் எல்லாம் கோயிலில் திருமணத்தை வைத்துக் கொள்வர்.
ஆமை வேகம்
ஆனால் கடந்த 7 மாதங்களாக கோயில்களும் மூடப்பட்டுவிட்டதால் கோயில் வாசலில் நின்று திருமணம் செய்து கொள்ளும் நிலையும் இருந்தது. இப்போதுதான் இரு மாதங்களாக மெல்ல மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை ஆமை வேகத்தில் திரும்பி வருகிறது.
வீட்டு விசேஷங்கள்
இந்த ஐப்பசி மாதத்தில்தான் திருமணம், வீடு கிரகபிரவேசம், காது குத்து, நிச்சயதார்த்தம், வளைகாப்பு உள்ளிட்ட விசேஷங்கள் நடத்துவர். சிலருக்கு கார்த்திகையில் சுபகாரியங்களை செய்யும் பழக்கம் இருக்காது. மார்கழியில் சுப காரியமே செய்யக் கூடாது என்கிறார்கள். இதனால் இந்த ஐப்பசியை விட்டுவிட்டால் இதோடு அடுத்த தை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
புயல்
இதனால் ஐப்பசி மாதத்திலேயே மக்கள் சட்டுபுட்டு என வேலையை முடிக்க முயற்சிக்கிறார்கள். பழைய படி சுப விசேஷங்கள் களை கட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நிவர் புயல் உருவாகியுள்ளது. 7 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமணங்கள்
இதனால் அன்புக்குரியவர்களின் திருமணங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். கொரோனாவால் களையிழந்த திருமணங்கள் தற்போது நிவர் புயலால் பொலிவிழக்கிறது. கொரோனாவா இருந்தாலும் புயலாக இருந்தாலும் பாதுகாப்புதானே முக்கியம்!