நிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து
சென்னை: நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
நிவர் புயல் புதன்கிழமையன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிதீவிர புயலாக வலுவான புயலாக நிவர் கரையை கடக்க உள்ளது. இதனையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடக்க இருந்த வெற்றிவேல் யாத்திரையானது புயலின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் அனைவரும் புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதற்கும் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் முருகன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.