8 மணிக்கு நிவர் புயல் கரையை கடக்கிறது.. பிறகு உள் மாவட்டங்களில் சூறாவளியாக சுழன்றடிக்கும்- வார்னிங்
சென்னை: நிவர் புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கத் தொடங்குகிறது. புயல் கரையை கடந்த பிறகு 6 மணி நேரத்திற்கு பாதிப்பு இருக்கும் என்று, தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
பாலச்சந்திரன், இன்று மாலை, 3.30 மணிக்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நிவர் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில், புதுச்சேரி அருகே கரையைக் கடக்க கூடும். நிவர் புயலின் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை தொட்டு கடக்க ஆரம்பிக்கும், அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகு, கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும்.
சூறாவளி காற்று
இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில், அதிக மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை காலை முதல் பிற்பகல் வரை வீசக்கூடும் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று
திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் பிற்பகல் வரை பலத்தக் காற்று வீசக் கூடும். இந்த பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக, குடிசை வீடுகள் பாதிக்கப்படலாம், விளம்பர பலகைகள் பாதிக்கப்படலாம், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்படலாம்.
பாதுகாப்பாக இருக்க வேண்டும்
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழல் கூடிய நிலை ஏற்படும். பப்பாளி மரங்கள் போன்ற தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தரை வழி
புயல் தரை வழியாக செல்லக்கூடிய பாதையில் நாளை எந்த விதமான பாதிப்பும் இருக்கும் என்பதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இதுவாகும். பலத்த காற்று மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடிய இடங்களை, இப்போதைய கணிப்பை வைத்து நாங்கள் சொல்லியுள்ளோம். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.