அதி தீவிர புயலாக கரையை கடக்கிறது நிவர்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: நிவர் புயல், அதி தீவிர புயலாக, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வலுவடைந்து புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதன்கிழமை மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
ஆல் கிளியர்.. இந்த இரண்டில் ஒரு இடத்தில் கரையை கடக்கும் நிவர் புயல்.. தமிழ்நாடு வெதர்மேன் புது தகவல்
சென்னையிலிருந்து தூரம்
சென்னையிலிருந்து 590 கிலோமீட்டர், புதுச்சேரியிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கிறது. வங்கக்கடலில் நிவர் தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் கரையை கடக்கும்.
பிற்பகலில் கரையை கடக்கும்
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் சென்னையை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. நிவர் தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் கரையை கடக்கும். நாளை மறுநாள் பிற்பகலில் புயல் கரையை கடக்கும். ஒருவேளை புயல் வேகம் தாமதமானால், மாலை அல்லது இரவில் கரையை கடக்கும்.
அதிக மழை
நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர் 24ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் பகுதிகளில் அதிக கன மழை வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், பல மாவட்டங்களில் 26ம் தேதி மின்சாரம் துண்டிக்கப்படும். இதை மின்சாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். போதிய மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.