பேய்ட்டி புயல்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை- தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் உருவான பேய்ட்டி புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்தார்.
தெற்கு வங்கக் கடலில் பேய்ட்டி புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக உருவாகவுள்ளது. நாளை பிற்பகல் ஆந்திரம் மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், என்ன அழகான மேகக் கூட்டங்கள் கூடியிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகுவதற்கு தீவிரமாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் பேய்ட்டி புயல் உருவாக்கம் குறித்து உறுதி செய்துள்ளது.
இயலாத நிலை
இந்த புயல் நமக்கானது அல்ல என்பதை நான் ஏற்கெனவே போட்ட பதிவுகளில் கூறியுள்ளேன். இந்த புயல் ஆந்திராவுக்கானது. இந்திய பசிபிக் மலை முகடு தமிழகத்துக்கு தொலைவில் இருப்பதற்கு நாம் முதலில் நன்றி கூறிக் கொள்வோம். மேற்கு நோக்கி இருக்கும் பகுதி பள்ளமாக இருப்பதால் இந்திய பசிபிக் மலை முகட்டால் மேற்கு பக்கம் பரவ இயலாத நிலை உள்ளது.
எங்கு நகர்கிறது
இதனால் பேய்ட்டி புயல் வடக்கு நோக்கியே நகரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்யும். உருளையாக உள்ள மேகக் கூட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய கடலோர பகுதிகளை நோக்கி நகர்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
மிதமான மழை
பெரும்பாலும் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்யும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலும் லேசாக மழை பெய்யும். பேய்ட்டி புயல் மேற்கு நோக்கி சென்னைக்கு மிக அருகில் வந்தால் நமக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.
மிதமான மழை
ஒரு வேளை பேய்ட்டி புயல் சென்னையிலிருந்து கிழக்கு பக்கம் நகர்ந்துவிட்டால் மேற்கு நோக்கிய மேகக் கூட்டங்களை இருக்காது. இதனால் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.