கடலில் ஏற்பட்ட மாற்றம்.. ஆட்டம் காட்டும் டவ்-தெ புயல்.. திடீரென வேகம் எடுத்தது எப்படி? - பின்னணி!
சென்னை: அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள டவ்-தெ புயல் தற்போது நினைத்ததைவிட வேகமாக பயணிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக டவ்-தெ புயல் அதி தீவிர புயலாக சில நிமிடங்களுக்கு முன் உருவெடுத்தது.
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த புயல் தற்போது வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இன்று காலை வரை தீவிர புயலுக்கு இணையான வேகத்துடன் டவ்-தெ நகர்ந்து கொண்டு இருந்தது.
இதன் வேகம் காரணமாகவே தற்போது குமரியிலும், கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. புயல் நினைத்ததை விட கொஞ்சம் கூடுதல் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது!
கர்நாடகா
கர்நாடகாவிலும், கோவாவிலும் இதனால் மேகங்கள் திரண்டு கடந்த 2-3 மணி நேரமாக மழை கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அதி தீவிர புயலாக டவ்-தெ உருவெடுத்துள்ளது. டவ்-தெ புயலின் வேகம் காரணமாக காற்றின் வேகம் 120 கிமீ ஆக உள்ளது. காற்றின் வேகம் புயல் கரையை கடக்கும் போது 150 -160 கிமீ ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வேகம் எப்படி
பொதுவாக புயலின் வேகம் என்பது கடல் பரப்பில் இருக்கும் வெப்பத்தை பொறுத்து மாறும். அதேபோல் அங்கு இருக்கும் அழுத்த வேறுபாடுகளை பொருத்தும் அதை திசை மாறும். அந்த வகையில் அரபிக்கடலில் வெப்பநிலை உயர்ந்த காரணத்தால் புயலின் வேகமும் உயர்ந்தது. இன்று மாலைதான் இந்த புயல் அதி தீவிரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தீவிரம்
ஆனால் இப்போதே புயல் அதி தீவிரமாக மாறியுள்ளது. இந்த வெப்பநிலை உயர்வு எதிர்பார்த்ததுதான். இதனால் புயல் வேகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது புயல் இருக்கும் அரபிக்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசாக உள்ளது. இதனால்தான் நினைத்ததைவிட வேகமாக புயல் வேகம் எடுத்துள்ளது என்று வானிலை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஏன்
அதோடு டவ்-தெ புயல் மேற்கு பக்கமாக லேசாக நகர்ந்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக புயல் எங்கே கரையை கடக்கும் என்று தெரியாமல் ஆட்டம் காட்டிய நிலையில் இதன் பாதை தற்போது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக மேற்கு குஜராத்தில் உள்ள பாவ்நகர் அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எங்கே
தற்போது கோவாவில் இருந்து 100 கிமீ தூரத்தில் டவ்-தெ புயல் உள்ளது. மும்பைக்கு தெற்காக 450 கி.மீ தொலைவில் புயல் உள்ளது. குஜராத்தின் மேற்கு பகுதியை நோக்கி டவ்-தெ புயல் நகர்ந்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகாவில் தீவிர கனமழை பெய்து வருகிறது.