ஆந்திராவில் இன்று கரையை கடக்கும் புயல்? எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதால் எண்ணூர், நாகை, தூத்துக்குடியில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
கரையை கடக்கும் புயல்
இது மேலும் வலுவடைந்து இன்று தீவிர புயலாக மாறி, வடமேற்கு திசையில் நகரும். அப்போது, ஆந்திரா மாநிலத்தின் நர்சாபூர் மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைகளுக்கு இடையே இன்றிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன மழை
புயல் கரையை கடக்கும்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, கர்நாடகா மற்றும் மராத்வாடா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பிராந்தியங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மழை
கடலோர ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உட் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் அதி கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புயல் கூண்டு
இதையடுத்து, சென்னை-எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்று பலமாக வீசும் என்பதே ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டின் பொருள் ஆகும். புயல் கூண்டின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கதான் ஆபத்து அதிகம் என்று அர்த்தம். 1ம் எண் என்பது குறைந்தபட்ச எச்சரிக்கை. ஆனால், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.