தேர்தல் தோல்வியால் 'காண்டு'... பிரேமலதாவை போலவே மக்களுக்கு சாபம் கொடுக்கும் ராமதாஸ்
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியால் படுகோபத்தில் இருக்கும் அதிமுக கூட்டணித் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு சாபத்தையே கொடுத்து வருகின்றனர்.
அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் இழுத்தது பாஜக. பாமகவை பொறுத்தவரையில் அனைத்து வகை பேரங்களையும் பேசி கடைசியாக அதிமுக அணிக்கு போனது.\
தேமுதிகவும் இதே வியூகத்தையே கையாண்டு அதிமுக அணிக்கு சென்றது. ஏற்கனவே பாஜக மீது கடும் கோபத்திலும் கொந்தளிப்பிலும் இருக்கும் தமிழக மக்கள் அதை அப்படியே தேர்தலில் கொட்டி குமுறித் தீர்த்தனர்.
மோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக
மாற்று அரசியல் இல்லை
இதன்விளைவாகத்தான் அதிமுக அணி பெரும் தோல்வியை எதிர்கொள்ள நேரிட்டது. வட இந்தியாவில் இந்துத்துவா அரசியலுக்கு மாற்று அரசியலை எந்த ஒரு அரசியல் கட்சியும் முன்வைக்காததால் பாஜக விஸ்வரூப வெற்றியைப் பெற்று வருகிறது.
தத்துவார்த்த எதிர்ப்பு
அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜகவை தத்துவார்த்த ரீதியாகவும் எதிர்ப்பது நடைபெற்று வருகிறது. இதனால்தான் தாமரை இங்கே மலரவே முடியாது என்கிற திட்டவட்டமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் மக்கள்.
கூட்டணி பேரம்
இந்த அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்ளத்தெரியாதவர் பிரேமலதா. கடைசி நொடி வரையும் கல்லா தேறுவதுதான் கூட்டணி என்கிற முடிவில் இருப்பவர் அவர். காரல் மார்க்ஸ் உள்ளிட்ட ஆகப் பெரும் தத்துவார்த்த சிந்தனையாளர்களை 'கொள்கை' தலைவர்களாக கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸும் கூட பிரேமலதா பாணியில் பேசுவது அவருக்கு அழகு அல்ல.
அசையா துரும்பு
கடந்த லோக்சபா தேர்தலிலும் கூட அத்தனை அதிமுக எம்.பி.க்கள் இருந்தும் எதையாவது சாதிக்க முடிந்ததா? வரலாறு காணாத அளவுக்கு போராட்டங்கள், தற்கொலைகள், மரணங்கள் என நிகழ்ந்தும் மத்திய அரசின் கரிசனப் பார்வை துரும்புக்காவது கிடைத்ததா? என்பதை டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் மனசாட்சி நன்கு அறியும்.
புதிய எம்பிக்கள்
அதேபோல் தற்போதைய திமுக எம்.பிக்கள், சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கப்பட்டால் சண்டமாருதங்களாக எப்படி சீறுவார்கள் என்பதையும் டாக்டர் ராமதாஸ் அறியாதவர் அல்ல.. அரசியலுக்காக பிரேமலதாக்களைப் போல பேசுவது அபத்தத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை!